திருச்சியில் பொன்மலை அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை: மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
திருச்சி: திருச்சி பொன்மலை பகுதி அதிமுக செயலாளர் சேகரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி பொன்மலை பகுதி அதிமுக செயலாளர் சேகர். இவர், கேபிள் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பெயர் கயல்விழி. இவர் 29 வது வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ளார். இவர்களது வீடு அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் உள்ளது.
திருச்சி மாநகராட்சியின் முதல் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று காலை கயல்விழி தனது வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். மனைவியுடன் சேகரும் சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் சேகரை அரிவாளால் சரமாரியாக தாக்கியது.
இதில் சேகரின் வலது கை மற்றும் கழுத்து, கால் போன்ற பகுதியில் வெட்டு விழுந்தது. உயிருக்குப் போராடிய சேகரை அருகில் உள்ள மாருதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த தகவல் அறிந்த உடன் திருச்சி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சட்ட அமைச்சர் பரஞ்சோதி, அதிமுக மாவட்டச் செயலாளர் மனோகர் உள்பட பலரும் விரைந்து சென்று சேகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சேகர் படுகொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications