குமரிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை-24 மணி நேரத்தில் கன, மிக கன மழை பெய்யும்

வங்கக் கடலில் ஏற்கனவே ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது மேலும் வலுவடைந்து மேற்கு நோக்கி நகரத் தொடங்கியிருப்பதால் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்துவருகிறது.
தலைநகர் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் விடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் நகரமே வெள்ளக்காடாகியுள்ளது. சாலைகள் பலவும் மழை நீரில் மிதந்து வருகிறது. பல சாலைகள் மேலும் மோசமடைந்துள்ளன.
13 மாவட்டங்களில் பள்ளிகள் மூடல்
இந்த மழை மேலும் வலுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் 13 ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல புதுவை, காரைக்காலிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை
இந்த நிலையில் குமரிக் கடல் பகுதியில், பாக் ஜலசந்தியில், புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையத் தரப்பி்ல் கூறுகையில், இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால்தான் கனமழை பெய்து வருகிறது.
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் அனேக பகுதிகளிலும், உட்புறத் தமிழகத்திலும் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யும்.
கடலில் பலத்த காற்று வீசும். மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என அச்சுறுத்தப்படுகின்றனர்.
திருவாடானையில் 20 செ.மீ மழை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிக அளவாக திருவாடானையில் 20 செமீ மழை பெய்துள்ளது. முத்துப்பேட்டையில் 18, கொள்ளிடத்தில் 17, காட்டுமன்னார் கோவிலில் 16, சென்னை மீனம்பாக்கத்தில் 10, நுங்கம்பாக்கத்தில் 7 செமீ மழை பெய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கன மழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் சேதமடைந்துள்ளன. பல பகுதிகள் நீரில் மிதக்கும் நிலை காணப்படுகிறது.
சென்னையில் திருவான்மியூர், பெசன்ட் நகர், மடிப்பாக்கம், அம்பத்தூர், திருவொற்றியூர், சாந்தோம் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளன. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
நாகை மாவட்டத்தில்
நாகை மாவட்டத்தில் 2வது நாளாக இன்றும் பலத்த மழை பெய்துவருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்குள் போகவில்லை.
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
விருத்தாச்சலத்தில் கிருஷ்ணமூ்ர்த்தி என்பவர் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் உயிரிழந்தார். அவருடன் வந்த மாடுகளும் உயிரிழந்தன.












Click it and Unblock the Notifications