சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை வாபஸ் பெறாவிட்டால்..: தா.பா. மத்திய அரசுக்கு எச்சரிக்கை
திருவாரூர் : சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு வாபஸ் பெறாவிடில் வணிகர்களை ஒருங்கிணைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று நாள் மாநிலக் குழுக் கூட்டம் திருவாரூரில் வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் பால், பஸ் கட்டண உயர்வு பொது மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. விலை உயர்வு மூலம் மாநில அரசின் வருவாயை அதிகரிக்க முதல்வர் எடுத்துள்ள முடிவு துணிச்சலான முடிவு அல்ல.
தேவையான வருவாயை சட்டப் பேரவை நிதிநிலை அறிக்கையின் வரவு, செலவு திட்டத்தின் மூலமே சமாளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டிய பயிர்க் காப்பீட்டுத் தொகையை தாமதம் இன்றி உடனே வழங்க வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் உரத் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், அவற்றின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு வாபஸ் பெறாவிடில் வணிகர்களை ஒருங்கிணைத்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டத்தில் ஈடுபடும்," என்றார்.












Click it and Unblock the Notifications