மழைக்கு பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ 2 லட்சம்! - முதல்வர் அறிவிப்பு

இது தொடர்பில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக 26.11.2011 அன்று திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், செனாவாரம் கிராமத்தைச் சேர்ந்த மஸ்தான் என்பவரின் மகன் அபுதாகீர்; செங்கம் வட்டம், சி.நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரின் மனைவி ரோஸ்மேரி மற்றும் திருச்சி மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மனைவி புஷ்பவல்லி ஆகியோர் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,
கடலூர் மாவட்டம், கம்பளிமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவரின் மகன் நரேஷ், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்ஓலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி பாப்பாயி, புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி என்பவரின் மகன் அழகுராஜ் மற்றும் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், ஒடுவன் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜீகண்ணு என்பவரின் மகன் நித்தீஷ் ஆகியோர் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், கொந்தகாரி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜி என்பவரின் மகன் சுபாஷ் நீர் தேங்கியுள்ள பள்ளத்தில் விழுந்து மூழ்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.
பல்வேறு விபத்துகளில் மரணமடைந்த இந்த எட்டு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் உதவித் தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஆயுதப்படை 14-வது பட்டாலியன் பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்த கார்த்திக் என்பவர் 25.11.2011 அன்று பணியில் இருக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க துயருற்றேன். காவலர் கார்த்திக் பணியில் ஈடுபட்டிருந்த போது காலமானார் என்னும் செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது.
கார்த்திக் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடமையாற்றிக் கொண்டிருந்த போது காலமான காவலர் சு.கார்த்திக் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications