கனமழையால் நிரம்பி வழியும் தமிழக அணைகள் – ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அணைகளும், ஏரிகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்பட்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து திருவனந்தபுரம் அருகே நிலை கொண்டிருப்பதால் தமிழ்நாடு முழுவதும் கன மழை கொட்டிவருகிறது. சென்னையில் வியாழக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. நுங்கம்பாக்கம், பட்டினப்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், ஹோட்டல்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கனமழையினால் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டடத்தில் 4 கடைகள் இயங்கி வந்தன. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். இதில் ஒருவரது கை உடைந்தது. வேறு யாரும் கடைக்குள் சிக்கியுள்ளனரா என போலீசார் தேடி வருகின்றனர்.

அடையாற்றில் வெள்ளம்

தாம்பரம் ,சோழிங்கநல்லூர், பூவிருந்தவல்லி ஆகிய பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. தொடர் மழை காரணமாக பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவதால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளன. தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணை நிரம்பிவருகிறது. உபரி நீரி திறந்து விடப்படுவதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கனமழையினால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பாபநாசம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு விநாடிக்கு 9 ஆயிரத்து 531 கன அடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நேற்று 100 புள்ளி 25 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர் மட்டம் இன்று 110.50 அடியாக உயர்ந்து உள்ளது. நீர் மட்டம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட உள்ளது. மேலும் சேர்வலாறு அணையின் நீர் மட்டம் 109 புள்ளி 91 கன அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர் மட்டம் 74 புள்ளி 70 கன அடி அளவாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வரதமாநதி அணை மற்றும் மருதாநதி அணையும் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெள்ளிமைக்கிழமை நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்ததால் குண்டாறு அணைக்குட்பட்ட ஆற்றுப்படுகைகளில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்தது. இதில்

வல்லம் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்தாத்தாள் (70) நேற்று காலை வல்லம் பகுதியில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கு சென்று ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மூதாட்டி முத்தாத்தாள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். செங்கோட்டை, கடையநல்லூர் பகுதியிலிருந்து நேற்று காலை முதல் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முத்தாத்தாளை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றுப்படுகைகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம்'' என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக பெய்த பலத்த மழைக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால் தமிழ்நாடு முழுவதும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+