இது நல்லதுக்கில்ல... நாசமா போயிடுவீங்க! - ஜெ ஆட்சி பற்றி சீமான்

Subscribe to Oneindia Tamil

Seeman
சென்னை: மத்திய அரசு நிதி தரவில்லை என்ற காரணத்தைக் காட்டி மக்கள் தலையில் விலைவாசி உயர்வை திணித்திருக்கும் இந்த ஆட்சி நாசமாகப் போய்விடும் என கடுமையாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.

சென்னை அம்பத்தூரில் உள்ள 'ஆஸ்ஸி" பள்ளி மைதானத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் விழாவில் இயக்குநர் சீமான் பேசியது:

ஒருத்தன் கேட்கிறான் பால் விலை, பேருந்து கட்டணம் எல்லாம் ஏறிவிட்டது. ஏனென்றால், பொதுநிறுவனங்களை பாதுகாக்க நிதி இல்லை. உடனே ஒருத்தன் எடுத்து பேசுறான், அண்ணா நூலகத்தை மாற்ற காசு இருக்கு. இதுக்கு காசு இல்லையா. இதுக்கு யாரிடம் பதில் இருக்கு?

மத்திய அரசு, மாநில அரசு கேட்ட நிதியை ஒதுக்கி தரவில்லை. மத்திய அரசுடன் கூட்டணி அமைக்காமல் இந்த அரசு அமைந்திருக்கிறது. பெரும்பான்மையோடு அமைந்திருக்கிறது. தனக்கு அடிபணியவில்லை. அதனால் வஞ்சிக்கிறது. பொதுவாகவே இந்தியாவை ஆளுகிற காங்கிரஸ் அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரானது.

மேற்கு வங்காளத்தை ஆளுகிற மம்தா பானர்ஜியோடு கூட்டணி வைத்திருக்கிறது. அதனால் கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுக்கிறது. இங்கே ஆளுகிற அதிமுக அரசு காங்கிரசோடு கூட்டணி வைக்கவில்லை. அதனால தேவையான நிதியை தரவில்லை.

சரி, அப்ப நீங்க (ஜெ அரசு) என்ன செய்திருக்க வேண்டும். மக்களிடம் சொல்லியிருக்க வேண்டும். கேட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கி தராததால், நான் விலைவாசியை உயர்த்தினால் பால் விலை 6 ரூபாய் 25 காசு கூடும். பேருந்து கட்டணம் இரட்டிப்பாகும். பேருந்தில் எவன் போவான்.... ஷேர் ஆட்டோவில் போகமுடியாதவன். இருசக்கர வாகனம் வைத்துக்கொள்ள முடியாதவன். கார் வைத்துக் கொள்ள முடியாதவன். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். மாதச் சம்பளம் 3 ஆயிரம் ரூபாய், 4 ஆயிரம் ரூபாய் வாங்குபவன்தான் பேருந்தில் போவான். அவன் காசை பறித்து, அதில் இருந்து நிதியை பெருக்கி, நிர்வாகத்தை சீர்செய்ய வேண்டும் என்பது எவ்வளவு ஆபத்தானது, எவ்வளவு மோசமானது என்பதை சிந்திக்க வேண்டும்.

அப்ப என்ன செய்திருக்க வேண்டும். என் அன்பு மக்களே, இவ்வளவு பிரச்சனை இருக்கிறது. தமிழக அரசுக்கு நிதி தரவில்லை என்றால், பால் விலையை ஏற்றினால், பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் உங்களுக்கு இவ்வளவு சுமை இருக்கும். இவ்வளவு கஷ்டத்தை மக்கள் மீது சுமத்த முடியாது. எனவே எனக்கு ஆதரவாக நில்லுங்கள். நான் போராடுகிறேன். என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.

அப்படித்தான் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் போராடினார்கள். மத்திய அரசு வேண்டிய அறிக்கையை கொடுக்காதபோது, மக்களைத் திரட்டி ஒரு நாள் போராட்டம் நடத்தினார். அடுத்த நாள் பதறிக்கொண்டு அறிக்கையை கொடுத்தது மத்திய அரசு. அப்படி போராடி இருக்க வேண்டும்.

மத்திய அரசு, உங்களை அடித்தால், நீங்கள் திருப்பி அவர்களைத்தான் அடிக்க வேண்டும். பக்கத்தில் இருக்கும் அப்பாவியை அடிக்கக் கூடாது. அது சரியல்ல.

இதோ... அடக்குமுறையை ஆரம்பித்துவிட்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் பேச அனுமதி இல்லை. பெரம்பலூரில் டிசம்பர் 15ல் தம்பி அப்துல் ரசாக்கின் நினைவுத் தினத்திற்கு கூட்டம் போட்டால் அந்த இடத்தில் அனுமதியில்லை.

ஏன்? பக்கத்தில் அகதிகள் முகாம் இருக்கிறதாம். சீமான் பேசினால், பக்கத்தில் இருக்கிற அகதிகள் எல்லாம் துப்பாக்கியை தூக்கிக்கிட்டு இலங்கைக்கு போய்விடுவானா?

சீமான் பேசினால் உணர்வு பெற்றுவிடுவான். ஏண்டா... ஒரு தமிழன் கூட உணர்ச்சியே பெற்றுவிடக் கூடாதா. உணர்வே பெற்றுவிடக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தீங்கன்னா, இதை எங்கப்போய் சொல்லறது!

நான் இந்தக் கூட்டத்தில் பேசுவதற்கும், எங்கோ ஓரத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருக்கும் தமிழர்கள் உணர்வு பெறுவதற்கும் என்னடா சம்பந்தம் இருக்கு? அதுக்காக அந்த இடத்தில் பேச அனுமதி இல்லையென்றால், இதைவிட ஒரு கொடுமை, இதைவிட ஒரு சர்வாதிகாரம், இதைவிட அடக்கமுறை எதாவது இருக்கா?

கலைஞர் கருணாநிதி அவர்கள் என்னை பேச வைத்து, 'இறையாண்மைக்கு எதிரா பேசுறான். விடுதலைப்புலிகளை ஆதரிச்சு பேசுறான். சட்டத்துக்கு எதிரா பேசுறான் என்று தூக்கி தூக்கி உள்ளே போட்டாரு'. இதுக்கு அதுவே பரவாயில்லையே! இங்கே நீ என்னை பேசவே விடல. அந்த கொடுமையை தொலைக்கத்தான் இந்த வேலையை செய்தோம். இது அதைவிட பெரிய கொடுமையா இருக்கு. இதை தொலைக்க பெரிய வேலை செய்யணும் போலிருக்கே நாங்க!

நான் சொன்னேன் ஒரு அதிகாரிகிட்ட, இது சரியில்ல, இது ஆட்சியில்ல... நாசமா போயிருவீங்கன்னு சொன்னேன். இது நிச்சயம் நடக்கும்.

இந்த சேட்டையெல்லாம் நீங்க வைச்சிக்கக் கூடாது. ஒன்றை தெரிந்துக் கொள்ளுங்கள். அப்படியே ஒரு வாய்க்காலில் ஓடுகிற தண்ணீரை நீங்க அடக்கி தேக்கி தேக்கி வைச்சி வைச்சி திறந்தீங்கண்ணா, அது வேக வேகமா பாயும். ஆளையே அடிச்சிக்கிட்டுப் போயிடும்.

அதைத்தான் நீங்க செஞ்சிக்கிட்டு இருக்கீங்க. இரவு முழுவதும் பட்டியில் கட்டி வைத்திருந்த மாடுகளும், ஆடுகளும் காலையில் திறந்து விட்டால் எவ்வளவு வேகமா வெளியே பாய்ந்து வருமோ, அவ்வளவு வேகமா நாங்க வருவோம். ஆடு, மாடுகளே அப்படி பாயும்போது, வீரத்தமிழ் புலிகள் நாங்கள் எப்படி பாய்வோம் என்று நீங்க புரிஞ்சிக்க வேண்டிய காலம் வரும்!"

- இவ்வாறு சீமான் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+