மின் பற்றாக்குறையைப் போக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை - மின் பொறியாளர்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையை சமாளிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற மின்சேமிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய பொறியாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் மின்சேமிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்திய பொறியாளர் கழக சிறப்பு கூட்டம் கழக தலைவர் கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மின்சார சேமிப்பின் அவசியம் குறித்து தூத்துக்குடி அனல்மின் நிலைய செயற்பொறியாளர் கிருஷ்ணவேல் பேசியதாவது;
தமிழகத்தில் மின் உபயோகத்திற்கும், மின் உற்பத்திக்கும் 2 ஆயிரத்து 500 மெகாவாட் இடைவெளி இருக்கிறது. 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு மின் வாரியம் பெரும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. இதனால் மக்களின் முழு ஒத்துழைப்பு மின் வாரியத்திற்கு அவசியம் கொடுக்க வேண்டும்.
மின்சேமிப்பு அவசியம்
ஒவ்வொரு வீட்டிலும் 2 மின் விளக்குகளை அல்லது ஒரு ஃபேனை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்த்தால் போதும் 80 லட்சம் வீடுகளின் மின் தடையை முற்றிலுமாக தவிர்த்து விடலாம்.
அரசு அலுவலகங்களில் அனாவசியமாக லைட்டுகள் எரிவதையும், ஃபேன்கள் சுற்றுவதையும் நிறுத்த வேண்டும். பகல் நேரங்களில் வீடுகளில் செலவிடும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கு 3 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டியுள்ளது. இரண்டு யூனிட் மின்சாரம் வீணாகத்தான் போக வேண்டியிருக்கிறது. இதனால் மின்சாரத்தை மக்கள் மிச்சப்படுத்த வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications