சென்னை சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை: சென்னையில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. மூன்று நாட்களாக கொட்டிய கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகரின் முக்கால்வாசி சாலைகள் மோசமடைந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய மழை ஞாயிறுக்கிழமை நள்ளிரவு வரை தொடர்ந்து பெய்தது. சிறிது நேரம் பலத்த மழை பெய்வதும், பின்னர் விட்டு, விட்டு தூறுவதுமாக மழை பெய்த மழையால் சென்னை நகரமும், புறநகர் பகுதிகளும் வெள்ளக்காடாக மாறின.
ஆறுகளில் வெள்ளம்
பலத்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியுள்ளதால் அங்கிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கூவம் ஆறு, அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறுகளில் தண்ணீர் ஓடியதை ஏராளமானோர் உற்சாகத்துடன் பார்த்தனர்.
இந்தத் தண்ணீர் மாங்காடு, ஆவடி, குன்றத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்ததால், சாலைகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. மேலும் குடியிருப்புகளிலும் கூட மழை நீர் புகுந்தது.
போக்குவரத்து பாதிப்பு
சென்னையில் பல்வேறு சாலைகளில் வெள்ளநீர் ஆறுபோல ஓடியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாரிமுனையில் உள்ள பேருந்து நிலையத்தில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். சரியான வடிகால் வசதி செய்யப்படாததால் மழைநீர் செல்ல வழியின்றி சென்னை நகரின் சாலை முழுவதும் வெள்ளநீர் தேங்கியது.
வியாசர்பாடியில் புதிதாக பாலம் கட்டப்பட்டு வரும் இடத்தின் அருகே மழைநீர் ஆறுபோல ஓடியது. அந்த வெள்ளத்தில் கார்கள், லாரிகள் சென்ற காட்சி, நீந்திச்சென்றதுபோல இருந்தன. நடந்து சென்றவர்கள் சிரமப்பட்டனர்.
இதேபோல அயனாவரம் மெயின் ரோடு, ஓட்டேரி மெயின் ரோடு, கொடுங்கைiர், மூலக்கடை, மாதவரம் மெயின்ரோடு, கொளத்தூர் மெயின்ரோடு, சென்னை கோயம்பேடு 100 அடிசாலை, மதுரவாயல், ஆலப்பாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு மார்க்கெட், தியாகராயநகரில் சில தெருக்கள் உள்பட பெரும்பாலான இடங்களில் மழைநீர் ஓடைபோல ஓடியதால் நேற்று பகலில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜமாலியா மெயின் ரோட்டில் குளம்போல தேங்கிக்கிடந்த நீரினால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின.
வீடுகளுக்குள் தண்ணீர்
அளவுக்கதிகமான மழையால் வியாசர்பாடி, நுங்கம்பாக்கம், பட்டிணப்பாக்கம், புறநகர் பகுதிகளிலும் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வராமல் மக்கள் முடங்கியுள்ளனர்.
பள்ளமான சாலைகள்
அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருவதால் சென்னைநகரின் சாலைகள் அனைத்தும் பள்ளங்களாக மாறியுள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications