இருளர் சமுதாய பெண்கள் பலாத்கார வழக்கு-5 போலீஸார் சஸ்பெண்ட், 4 பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம்
சென்னை: இருளர் சமுதாயப் பெண்கள் நான்குபேரை பாலியல் பலாக்காரம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து திருக்கோவிலூர் காவல்நிலைய போலீசார் 5 பேரை பணி இடை நீக்கம் செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மண்டபம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசிக்கும் பழங்குடியினத்தவர்களை திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்த போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற பெண்கள் நான்கு பேரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர், தலைமைக்காவலர் உள்ளிட்ட 5 பேரை முதலமைச்சர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வன்கொடுமை தடுப்புச் சட்டம்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட சிலதிருட்டு வழக்குகள் தொடர்பாக, திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் 22.11.2011 அன்று இரவு மண்டபம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் போது அந்த கிராமத்தைச் சேர்ந்த 4 இருளர் பெண்களை காவல்துறையினர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, காவல் துறையில் ஒரு புகார் பெறப்பட்டது.
குற்ற நடைமுறை சட்டப்பிரிவு 176 (1)ன்படி இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, திருக்கோவிலூர் நீதித்துறை நடுவர் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்புச்) சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணி இடை நீக்கம்
முதற்கட்ட விசாரணையில், இருளர் இனத்தைச் சேர்ந்த சில பெண்களை காவல் துறையினர் இரவு நேரத்தில் வாகனத்தில் வைத்திருந்ததாக தெரிய வந்ததால், எனது உத்தரவின் பேரில், ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன் மற்றும் பக்தவச்சலம்ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ரூ. 5 லட்சம் நிவாரணம்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான புகார், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி, திருக்கோவிலூர் நீதித்துறை நடுவர் அவர்களால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
காவல் துறையினர் குற்றம் இழைத்ததாக இந்த விசாரணை முடிவில் தெரியவந்தால், அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தா.பாண்டியன் அதிர்ச்சி:
இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தி.மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த 4 பழங்குடி பெண்கள் மீது காவல்துறையினர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வாச்சாத்தி கொடுமைகளுக்கு தீர்ப்பு வந்தபிறகும் இது போன்று நடந்திருப்பது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முழு விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications