புதிய பொலிவு பெறும் அரசுப் பள்ளிகள்: ரூ.10.23 கோடியில் மராமத்து பார்க்க திட்டம்
நெல்லை: தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் மராமத்து பணிகளுக்கு ரூ.10.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலை குறைக்கவும், சேர்க்கையை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்ட ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்து. இது தவிர பள்ளிகளில் சிறு மராமத்து பணிகளை மேற்கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய மத்யமிக்சிஷா அபியான் எனும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்படி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) இந்த ஆண்டு முதல் மானியம் வழங்கப்படுகிறது.
மராமத்து பணிகளுக்காக நிதி பெற விதிமுறைகள் இருந்தும் இந்நிதியை பெறுவதில் சிக்கல் இருந்தது. மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குனரும், ஆர்.எம்.எஸ்.ஏ.திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான கார்மேகம், மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் கேட்டு இந்த ஆண்டு முதல் இந்நிதியை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
மராமத்துப் பணி மானியம் தேவைப்படும் பள்ளிகளை அடையாளம் காண இடைநிலைக் கல்வி நிர்வாக தகவல் முறை (செமிஸ்) எனும் ஆய்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் ஆய்வு அறிக்கையில் இடம் பெறும் பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது.இதன்படி 2011-12ல் தமிழகம் முழுவதும் 4,092 அரசு, நகராட்சி, மாநகராட்சி, ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.10.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள 260 பள்ளிகளுக்கு ரூ.65 லட்சமும், அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 228 பள்ளிகளுக்கு ரூ.57 லட்சமும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 227 பள்ளிகளுக்கு ரூ.56.75 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது, பள்ளியின் கூரை, கதவு, ஜன்னலில் உள்ள உடைந்த பகுதிகளை புதிதாக மாற்றுவது, கம்ப்யூட்டருக்கு புதிதாக ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் பொருத்துவது, பழைய டெஸ்க், டேபிள், பெஞ்சுகளை மாற்றுவது உட்பட பள்ளியின் சிறு மராமத்துப் பணிகளை இந்த நிதியை பயன்படுத்தி மேற்கொள்ளலாம். பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து பேர் கொண்ட குழுவினர், பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடிவு செய்வர். நிதி பெற்ற 15 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இந்த புதிய திட்டத்தின் வாயிலாக இனி அரசுப் பள்ளிகள் புதிய பொலிவு பெறும் என்றனர்.












Click it and Unblock the Notifications