மதுரையில் வீடு புகுந்து தாய், மகள் மர்மமான முறையில் வெட்டிக் கொலை
மதுரை: மதுரையில் வீடு புகுந்து தாயையும், மகளையும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி பாண்டியம்மாள் (45). திருமங்கலம் நகராட்சியில் துப்பரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். அதில் ஒரு மகன் இறந்துவிட்டார். குடும்ப பிரச்சனை காரணமாக மோகனிடம் இருந்து பிரிந்த பாண்டியம்மாள் இந்திரா நகரில் வசித்து வந்தார். அவருடன் வாசுதேவி(19), குருவாயுர் கண்ணன், மகாலட்சுமி ஆகியோர் வசித்து வந்தனர். அருண்குமார் மட்டும் தந்தை மோகனுடன் இருக்கிறார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன் வாசுதேவிக்கும், சதீஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் குடும்ப தகராறு காரணமாக சதீஷிடம் இருந்து பிரிந்த வாசுதேவி தாய் பாண்டியம்மாளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் பாண்டியம்மாளின் வீட்டுக் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டார், பாண்டியம்மாளின் வீ்ட்டின் கதவு அருகே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டு வாசலின் பின்புறம் வாசுதேவி வெட்டு காயத்துடன் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, உள் அறையில் பாண்டியம்மாளும் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார்.
அவர்கள் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலை குறித்து வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இறந்த பாண்டியம்மாளுக்கு ஒரு அரசியல் கட்சி நிர்வாகிக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications