அணு உலைகள் பற்றிய வெள்ளை அறிக்கை தேவை – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் பா.ம.க. சார்பில் அணு உலைகள் ஆபத்தானவை என்ற தலைப்பில் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று கல்பாக்கம் பகுதி மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:
கூடங்குளத்தில் அணுஉலையை மூட கோரி அங்குள்ள பெண்கள் 47-வது நாளாக போராடி வருகிறார்கள். இங்கும் இந்த கலந்தாய்வுக்கு ஆண்களுக்கு நிகராக சரிபாதி பெண்கள் வந்திருக்கிறீர்கள். கல்பாக்கம் அணு உலைகளை நாங்கள் எதிர்ப்பதுகூட கூடங்குளம் மக்களை பார்த்து நடத்தவில்லை. ஏற்கனவே இப்பகுதி பொதுமக்களுடன் 2 நாட்கள் கலந்தாய்வு நடத்தி உள்ளோம்.
அணு உலைகளால் ஆபத்து
அணு உலைகளால் காஞ்சிபுரம், சென்னை, மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. ஏற்கனவே அணுமின் நிலையம் உள்ள பகுதி மக்கள் பல்வேறு ஆபத்துக்களை அனுபவித்து வருகிறார்கள்.
அணு உலை வேண்டாம்
ஆபத்து இல்லாத அணு உலையே கிடையாது. இப்போது கல்பாக்கத்தில் அதிவேக அணு உலை அமைக்க போகிறார்களாம். அமெரிக்காவில் இந்த அதிவேக அணுஉலை தொழில்நுட்ப முயற்சி கைவிடப்பட்டு விட்டது. உலகம் முழுவதும் கைவிடப்பட்ட அதிவேக அணுஉலையை கல்பாக்கம் மக்களின் தலையில் கட்ட முயற்சிக்கிறார்கள். இதில் பாதிக்கப்பட போவது தமிழர்கள்தான்.
இந்தியாவில் அண்மையில் நடந்த மிகப்பெரிய எழுச்சி போராட்டம் கூடங்குளம் போராட்டம்தான். இதற்கு ஆதரவாக சென்னையில் நாங்களும் போராட்டம் நடத்தி உள்ளோம். அணு உலை வேண்டுமா? வேண்டாமா? என்றால் எங்கள் பதில் வேண்டாம் என்பதுதான்.
இங்குள்ள ஆபத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்குதான் இந்த கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. கல்பாக்கத்தில் புதிய அணு உலைகளை கட்டகூடாது. இதை வலியுறுத்தி ஒவ்வொரு கிராமத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.அணு உலையை எதிர்த்து பெண்கள் போராட வேண்டும்.
வெள்ளை அறிக்கை தேவை
கல்பாக்கத்தில் அணு உலைகளால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து நடுநிலையான மருத்துவர் குழு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும்,
அணுஉலை பற்றி வெளிப்படையான விவாதம் நடத்த அரசு முன் வரவேண்டும். அதிவேக அணுஉலை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications