ரூ.6,500 லஞ்சம் பெற்ற மாநகராட்சி உதவி இன்ஜியர் கைது
சேலம்: சேலத்தில் வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்க, ரூ.6,500 லஞ்சம் பெற்ற மாநகராட்சி உதவி இன்ஜினியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி பராசக்தி நகரை சேர்ந்தவர் சரவணன்(30). அவர் புதிய வீடு கட்டுவதற்காக மாநகராட்சியில் அனுமதி கோரி, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார். அனுமதி பெறும் விண்ணப்பத்துடன் ரூ.3,900 கட்டணத்தை சரவணன் செலுத்தி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு அனுமதி கிடைக்க தாமதமானது.
சரவணன் இது குறித்து விசாரித்த போது, அவரது விண்ணப்பம் விசாரணைக்காக உதவி இன்ஜினியர் பாஸ்கர் என்பவரிடம் அளிக்கப்பட்டது தெரிய வந்தது. உதவி இன்ஜினியர் பாஸ்கரை தொடர்பு கொண்ட சரவணன், தனது விண்ணப்பம் குறித்து கேட்டார். அப்போது உதவி இன்ஜினியர் பாஸ்கர், கட்டிட அனுமதி அளிக்க ரூ.6,500 பணம் லஞ்சமாக கேட்டார்.
இன்ஜினியர் பாஸ்கருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன், இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், சரவணன் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாஸ்கரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications