மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி தலைவிரி கோலமாக டான்ஸ் ஆடிய பெண்!
பண்ருட்டி: மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறிய மணப்பெண் மண மேடையில் தலையை விரித்துப் போட்டு பேயாட்டம் போட்டதால் அத்தனை பேரும் அரண்டு போய் விட்டனர். இதனால் கல்யாணமும் நின்று போனது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது மேல்காங்கேயன்குப்பம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம். 25 வயதான இவருக்கும் 25 வயதான அழகப்பாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த உஷாராணிக்கும் திருமணம் நிச்சயமானது.
முத்தாண்டிக்குப்பத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நேற்று கல்யாணம் நடப்பதாக இருந்தது. இதையொட்டி ஏற்பாடுகள் களை கட்டியிருந்தன. மணமகன், மணமகள் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் கல்யாணத்திற்காக வந்திருந்தனர்.
பெண் அழைப்பு நடந்தபோது அனைவரும் எதிர்பாராத சம்பவம் நடந்தது. மணப்பெண் உஷாராணி திடீரென படு ஆவேசமாக தலைமுடியைக் கலைத்து விட்டு சாமி வந்தது போல பேயாட்டம் போட்டார். இதைப் பார்த்து அத்தனை பேரும் பயந்து போய் விட்டார்கள்.
வீடியோகிராபர் மணப்பெண் திடீரென சாமியாட்டம் போடுவதைப் பார்த்து அதை ஷூட் செய்ய கேமராவைத் திருப்பினார். ஸ்டில் புகைப்படக்காரரும் கிளிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த உஷாராணி அவர்களை போட்டோ எடுக்காதே, வீடியோ பிடிக்காதே என்று சத்தமாக கூறி தடுத்து நிறுத்தினார்.
ஏன் அவர் இப்படி நடந்து கொண்டார் என்று யாருக்கும் புரியவில்லை. இதையடுத்து உஷாராணியை சமாதானப்படுத்திய அவரது குடும்பத்தினர் தனியாக அழைத்துப் போய் பேசிப் பார்த்தனர். அப்போது தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை, கல்யாணம் வேண்டாம் என்று கூறியுள்ளார் உஷாராணி.
இதையடுத்து இரு தரப்பும் உஷாராணியிடம் பேசிப் பார்த்தது. ஆனால் அவர் பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து கல்யாணத்தை கைவிட முடிவானது. மணமகன் வீட்டார் பெரும் சோகத்துடன் திரும்பிச் சென்றனர். அதேபோல மணமகள் வீட்டாரும் பெருத்த வருத்தத்துடன் பொருட்களுடன் திரும்பிச் சென்றார்.
கல்யாண மண்டபத்தில் நடந்த இந்தக் கூத்தால் அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications