முல்லைப் பெரியாறு அணை உடையப்போகிறது என்றால் தேக்கடி படகு சவாரியை ஏன் நிறுத்தவில்லை?
சென்னை: முல்லைப் பெரியாறு அணை எந்நேரமும் உடையும் என்று கூறி தொடர் போராட்டங்கள் நடத்தும் கேரளா தேக்கடியில் ஏன் படகு சவாரியை நிறுத்தவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் 12 படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த படகு சவாரி மிகவும் பிரபலம். இந்தியா முழுவதிலும் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாது தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்வார்கள். தினமும் 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு பணம் பார்ப்பதற்காக அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்று பலரைக் கொன்றது கேரள சுற்றுலாத்துறை. இந்த சம்பவத்திற்குப் பிறகும் கூட அது படகு சவாரியை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. படகுகளும் நிரம்பி வழிந்தபடிதான் போகின்றன.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயத்தில் இருப்பதாகவும், அது உடைந்தால் பல லட்சம் மக்கள் பலியாவார்கள் என்று கூறி கேரளாவில் தொடர் போராட்டங்கள் ந்டந்து வருகின்றன. அணை எப்பொழுது வேண்டுமானாலும் உடையும் என்று கூறி அணையை ஒட்டியுள்ள வல்லக்கடவு, வண்டிபெரியாறில் இருந்து 450 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
ஆனால் இந்நிலையும் தேக்கடி படகு சவாரி மட்டும் நிறுத்தப்படவில்லை. அணை உடைந்தால் படகு சவாரி செய்பவர்களுக்கு மட்டும் எந்தவித பாதிப்பும் வராதா என்ன? அணை உண்மையிலேயே உடையும் அபாயத்தில் இருந்தால் படகு சவாரியை ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்வி தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தமிழக மக்கள் மற்றும் நாட்டின் இதர பகுதி மக்களிடமிருந்து வரும் பணம் மட்டும் சுளையாக வேண்டும் என்ற சுயநலம்தான் இந்த படகு சவாரி தொடருவதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications