தாராபுரத்தில் மீண்டும் நிலஅதிர்வு: மக்கள் பீதி
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தின் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று காலை 10.15 மணிக்கு நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சுற்றுவட்டாரங்களில் உள்ள மூலனூர் ஒரத்துப்பாளையம், கனக்கம்பட்டி, கன்னிவாடி, புதுப்பை, எரசினம்பாளையம், மூலப்பாளையம் உள்பட 10 கிராமங்களில் ஒரே நாளில் அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளு்ககு ஓடி வந்தனர்.
இந்நிலையில் தாராபுரம் சுற்று வட்டார கிராமங்களில் இன்று காலை 10.15 மணிக்கு மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. மூலனூரை அடுத்த கிளாண்குண்டல், சுள்ளிபொறுக்கிபாளையத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டது. ஏற்கனவே நிலம் எப்பொழுது அதிரும் என்ற பயத்தில் இருந்த மக்கள் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டதும் தெருக்களுக்கு ஓடி வந்தனர். பலத்த சத்தத்துடன் அதிர்வை உணர்ந்தாக மக்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 27ம் தேதி திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே நில அதிர்வு ஏற்பட்டது.வெள்ளகோவில் அடுத்த மயில்ரெங்கம், எரிசனம்பாளையம், கன்னிவாடி, ஒரத்துப்பாளையம் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு சில விநாடிகள் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.