கூடுதல் மண்ணெண்ணெய், மின்சாரம், நிதி கேட்டு ஜெயலலிதா பிரமருக்கு மீண்டும் கடிதம்
சென்னை: தமிழகத்திற்கு கூடுதலாக மண்ணெண்ணெய், நிதி வழங்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மண்ணெண்ணெயை மத்திய அரசு அளிக்கிறது. இதன் அளவு, கடந்த ஜூனில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்துக்கு முன்புவரை, மாதத்துக்கு 52, 806 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டது. ஜூனில் இருந்து 44,580 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மே மாதத்துக்குப் பிறகே மண்ணெண்ணெய் அளவு குறைப்பு நடந்துள்ளது.
மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டதால் தமிழக மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து மாநில அரசுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. மாநில அரசுடன் ஆலோசனையும் நடத்தவில்லை. எனவே, கடந்த ஏப்ரலில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட அதே அளவு மண்ணெண்ணெயை இப்போதும் தொடர்ந்து ஒதுக்குவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், அந்த அளவுடன் மேலும் 5 சதவீதம் அதிகரித்திட வேண்டும்.
மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு கடந்த மார்ச்சில் இருந்து 700 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது. கடந்த மே மாதம் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், மத்திய மின் தொகுப்பில் இருந்து அளிக்கப்படும் மின்சாரத்தின் அளவில் எந்த மாற்றமும் இல்லை.
எனவே, இந்தப் பிரச்னையில் தலையிட்டு மாநில அரசுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவை அதிகரித்திட வேண்டும். மத்திய மின் தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக அளிக்க வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தேன்.
மத்திய அரசின் மின் உற்பத்தித் திட்டங்களில் எதிர்பாராத கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த திட்டங்களில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் அளித்திட வேண்டும்.
திமுக அரசின் பொறுப்பற்ற செயல்பாட்டால் மாநிலம் மிகையளவு கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுமையை சமாளிக்க வாட், மாநிலத்துக்கான கலால் வரிகள், பஸ் கட்டணம், பால் விலை ஆகியன உயர்த்தப்பட்டுள்ளன என்பதை தாங்கள் அறிவீர்கள்.
ஆனாலும் மாநிலத்தின் நிதிச் சுமையை சமாளிக்க கூடுதலாக நிதியுதவி தேவைப்படுகிறது. தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மானியமாகவும், பகுதியளவு கடனாகவும் ரூ.25,000 கோடி தேவைப்படுகிறது. எனவே, அந்தத் தொகையை தந்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதன் மூலம் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த முடியும். இது தேசத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும்.
எனவே, தங்களிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications