முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் பாதிக்கப்படாத கன்னியாகுமரி
கன்னியாகுமரி: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தினால் தமிழக – கேரள எல்லையில் பதற்றம் ஏற்பட்டிருந்தாலும் கன்னியாகுமரியில் வழக்கம் போல பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமரி கேரளா மாநிலத்தின் எல்லையில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தொடங்கி தை வரை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சபரிமலைக்கு மாலை போட்டு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் முடிந்த உடன் கன்னியாகுமரி, குற்றாலம் என சுற்றுலா கிளம்பி விடுவர். கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சீசன் ஆரம்பித்த நாள் முதல் இதுநாள்வரை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரி வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் முல்லை பெரியாறு அணை பிரச்சினையால் தமிழக – கேரள எல்லையில் எழுந்த பதற்றம் காரணமாக கேரளாவில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வழக்கம் போலவே ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
காந்தி மண்டபம் முதல் கடற்கரை சாலை முழுவதும் ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பகவதி அம்மன் கோவில், சன்னதி தெரு பஜார், திருவேணி சங்கமம், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ஆகிய இடங்களில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் திரண்டிருந்தது. உணவகங்களிலும் கூட்டம் காணப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் கன்னியாகுமரி சுற்றுலாவை சிறிதும் பாதிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications