லோக்பால் மசோதா பிரச்சினை- டெல்லியில் அன்னா உண்ணாவிரதம்
டெல்லி: ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி சமூக சேவகர் அன்னா ஹஸாரே ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று டெல்லியில் தொடங்கினார்.
வழக்கம் போல பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷத்துடன் ஜந்தர் மந்தரில் இன்று காலை அவரது போராட்டம் தொடங்கியது. இந்த ஆண்டில் அவர் லோக்பாலுக்காக நடத்தும் 3வது உண்ணாவிரதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாவுடன் பெரும் திரளானோரும் பங்கேற்றுள்ளனர். முற்பகல்வாக்கில் கூட்டம் 500 பேராக இருந்தது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தேச பக்திப் பாடல்களைப் பாடியபடி பலரும் உண்ணாவிரதத்தில் தேசியக் கொடிகளுடன் கலந்து கொண்டுள்ளனர்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் லோக்பால் மசோதா தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் அனனா ஹஸாரே குழு கோரிய எதுவுமே இடம் பெறவில்லை. இதனால் அந்த அறிக்கையை அன்னா ஹஸாரே நிராகரித்து விட்டார். மேலும், இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் ராகுல் காந்திதான் என்றும் அவர் கடுமையாக குறறம் சாட்டியிருந்தார்.
முன்னதாக காலையில் காந்தி சமாதிக்குச் சென்று ஒரு மணி நேரம் தியானம் செய்தார் அன்னா. அதன் பின்னர் உண்ணாவிரதம் நடைபெறும் ஜந்தர்மந்தருக்கு வந்து சேர்ந்தார்.
பிருந்தா காரத், அருண் ஜேட்லி பங்கேற்பு
அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்தில் ராஜ்யசபா பாஜக தலைவர் அருண் ஜேட்லி, சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினரான பிருந்தா காரத் எம்.பி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். பல்வேறு கட்சிகளும் அன்னா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இவர்கள் தவிர சிபிஐ பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தான், தேசியச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடிக் கட்சியின் ராம் கோபால்யாதவ், தெலுங்கு தேசம் தலைவர் எர்ரான் நாயுடு, அகாலிதள தலைவர் தின்ட்சா, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அன்னா ஹஸாரேவின் இந்தப் போராட்டத்திற்குப் பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில் காங்கிரஸ் மட்டும் இதைக் கண்டித்துள்ளது. மேலும் லோக்பால் மசோதா தொடர்பாக தனது கூட்டணிக் கட்சிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெறும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அன்னாவின் உண்ணாவிரதம் நாடாளுமன்றத்திற்குப் பெருத்த அவமானம் என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் அல்வி கூறுகையில், நாடாளுமன்றத்தை அவமதிக்கிறார் ஹஸாரே. லோக்பால் மசோதாவை ஜந்தர் மந்தரில் உட்கார்ந்து கொண்டு உருவாக்க முடியாது என்றார் அவர்.
சென்னையிலும் உண்ணாவிரதம்
அதேபோல சென்னையிலும் ஊழல் ஒழிப்பு அமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது. மேலும், அன்னாவின் சொந்த ஊரான ராலேகான் சித்தியிலும் மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications