நில மோசடிப் புகாரின் பேரில் ஐஜி சிவனாண்டி சஸ்பெண்ட்

கடந்த அதிமுக ஆட்சியின்போது மேலிடத்திற்கு குறிப்பாக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு மிகவும் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருந்தவர் சிவானண்டி. கடந்த அதிமுக ஆட்சியின் இறுதி நேரத்தில், சட்டசபைத் தேர்தலின்போது அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் அளவுக்கு தீவிர அதிமுக விசுவாசியாக விளங்கினார் சிவனாண்டி. அப்போது அவர் உளவுத்துறை ஐஜியாக இருந்தார்.
பின்னர் 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து சிவனாண்டி ஓரம் கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டார். பல மாதங்கள் புறக்கணிக்கப்பட்டு வந்த அவர் பின்னர் திமுகவுடன் சமசரமானார். இதையடுத்து மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், சிவனாண்டி மறுபடியும் பின்னுக்குத் தள்ளப்பட்டார். அவரை கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக கண்காணிப்பாளராக முதலில் மாற்றினர். சமீபத்தில் நெல்லை போக்குவரத்துக் கழக கண்காணிப்பாளராக அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சிவனாண்டி மீது கொடைக்கானல் போலீஸார் ஒரு வழக்குப் பதிவு செய்தனர். கொடைக்கானலில் உள்ள வெல்வின் காட்டேஜ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான 1.44 ஹெக்டேர் நிலத்தை சிவனாண்டி, முன்னாள் கொடைக்கானல் நகராட்சித் தலைவர் கேசிஏ குரியன் ஆப்ரகாம் மற்றும் 10 பேர் சேர்ந்து ஆக்கிரமித்ததாக இந்த வழக்கு கூறியது.
இருப்பினும் இந்த வழக்கை மதுரையில் உள்ள உயர்நீதிமன்றக் கிளை நிராகரித்து விட்டது.
இந்தப் பின்னணியில் நில மோசடிப் புகாரின் பேரில் சிவனாண்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications