விவாகரத்து வழக்கு விசாரணையை ரகசியமாக படம்பிடித்தவர், சகோதரருடன் கைது
சென்னை: சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்த விவகாரத்து வழக்கு விசாரணையை ரகசியமாக பேனா கேமராவால் படம்பிடித்தவரையும், அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் கோபாலன் சிவதாணு (வயது 29), நிவேதா ஜனனி (26) ஆகியோரின் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு நிவேதா தனது வழக்கறிஞருடன் வந்து நீதிபதி முன்பு ஆஜரானார். கோபாலன் தனது சகோதரர் முத்தையன் சிவதாணுவுடன் வந்தார்.
முத்தையன் வழக்கு விசாரணையை தனது சட்டைப்பையில் வைத்திருந்த பேனா கேமிராவால் ரகசியமாகப் படம்பிடித்தார். ஆனால் அந்த பேனாவில் இருந்து அடிக்கடி வெளிச்சம் வந்து கொண்டிருந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர். உடனே முத்தையன் பாக்கெட்டில் இருந்த பேனாவைப் பறித்து நீதிபதியின் லேட்பாடாப்பில் போட்டுப் பார்த்தனர்.
அப்போது அதில் பதிவான விசாரணைக் காட்சி 4 நிமிடம் ஓடியது. இதையடுத்து சகோதரர்கள் 2 பேரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். உயர் நீதிமன்ற உதவி கமிஷனர் முரளி தலைமையிலான போலீசார் முத்தையன் மற்றும் கோபாலனை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் அத்துமீறி படம் பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் தங்கள் பாதுகாப்புக்காக தான் பேனா கேமரா வைத்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.