கேரளா செல்லும் சாலைகளில் மறியல் போர் நடத்தும் மதிமுக நிர்வாகிகள் பட்டியல்- வைகோ அறிவிப்பு
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை:
கேரள அரசும் அங்குள்ள அரசியல் கட்சிகளும் நமக்கு உரிமையுள்ள முல்லைப் பெரியாறு அணையை உடைத்தே விடுவது என்று முடிவு செய்துவிட்டார்கள். அணையை காப்பதற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பட்டாளத்தை அல்லது தொழில் பாதுகாப்புப் பட்டாளத்தை மத்திய அரசு அங்கே குவிக்க வேண்டும் என நியாயமான கோரிக்கையை தமிழக அரசு முன் வைத்தது.
கேரள அரசின் ஒப்புதலின்றி அப்படிச் செய்ய இயலாது என்றும், உச்சநீதிமன்றம் இதுபற்றி முடிவெடுக்கலாம் என்றும், மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் மத்திய ரிசர்வ் படையை அனுப்ப கேட்டுக்கொண்ட தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள நியாயமான கொந்தளிப்பை போக்குவதற்கும், நம்மை ஏமாற்றுவதற்கும் தங்கள் போராட்டங்களை கைவிட்டுவிட்டதாக மோசடி நாடகத்தை கேரள கட்சிகள் நடத்துகின்றன.
குமுளியில் வைகோ மறியல் செய்கிறார்
அணையை உடைக்கும் திட்டத்தை கேரளம் கைவிடச்செய்வதற்கு அவர்கள் இழைக்க முற்படும் அநீதியை தடுப்பதற்கு பதிமூன்று சாலைகளிலும் கேரளம் செல்லும் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி, பொருளாதார முற்றுகை போடுவதுதான் மிகவும் அவசியமாகும்.
இந்தப் போராட்டம் அறவழியில் அமைதி வழியில் நடைபெறும். போராட்டம் ஏற்கனவே அறிவித்தவாறு 21-ம் தேதி நடைபெறும். இதில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் கட்சிக்கொடிகளையும், பேனர்களையும் கண்டிப்பாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
போராட்ட இடங்கள், பங்கேற்கும் அமைப்புகள், அதன் தலைவர்கள் விவரம்:
குமுளி ரோடு லோயர் கேம்ப் (தேனி) - வைகோ, பழ.நெடுமாறன்,
கம்பம் கே.எம்.அப்பாஸ்,
கந்தேகவுண்டன் சாவடி (கோவை) - சு.துரைசாமி, ஆர்.மாசிலாமணி, மகேசு, ஆனைகட்டி (கோவை) - கொளத்தூர் மணி, கு.ராமகிருஷ்ணன்,
வளந்தாயமரம் - தியாகு,
நடுப்புணி (கோவை) - கணேசமூர்த்தி எம்.பி., மணியரசன்,
கோபாலபுரம் (கோவை) - உ.தனியரசு
வேலந்தாவளம் (கோவை) - அர்ஜுன் சம்பத்,
நாஞ்சில் சம்பத்
கம்பம் மெட்டு (தேனி) - மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், பெரியார் தாசன், நாகை திருவள்ளுவன்,
களியக்காவிளை (கன்னியாகுமரி) - நாசரேத் துரை, ரத்தினராஜ்,
செங்கோட்டை எல்லை (நெல்லை) - நாஞ்சில் சம்பத்,
போடி மெட்டு (தேனி) - பி.வி.கதிரவன், முருகன்ஜி,
9/6 சோதனை சாவடி (உடுமலை) செ.நல்லுசாமி, என்.எஸ்.பழனிசாமி, ஆடிட்டர் பாலசுப்பிரமணியம், செந்திலதிபன்,
நாடுகாணி (நீலகிரி) - டாக்டர் சி.கிருஷ்ணன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.