அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்
டெல்லி: சும்மா லோக்பால், லோக்பால் மசோதான்னு வலியுறுத்தினால் அன்னாவுக்கும் அவரது போராட்டத்தில் கலந்துகொள்ளும் 1,000 பேருக்கும் ஹெச்ஐவி வைரஸ் உள்ள ஊசியைக் குத்திவிடுவோம் என்று டெல்லி போலீசாருக்கு மொட்டை கடிதம் வந்துள்ளது.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றாவிட்டால் தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அன்னாவுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மிரட்டல் விடுத்து மொட்டைக் கடிதம் ஒன்று டெல்லி போலீசாருக்கு வந்துள்ளது. இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து கடிதத்தை அனுப்பியது யார் என்று தீவிரமாக விசாரி்தது வருகின்றனர். டெல்லியி்ல் இருந்து தான் யாரோ அந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறார்கள் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினால் அன்னா ஹசாரே மற்றும் அவர் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் 1000 பேருக்கு ஹெச்ஐவி வைரஸ் உள்ள ஊசியைக் குத்துவோம். இதற்காக 50 பேர் பிரத்யேக பயிற்சி எடுத்துள்ளனர். அவர்கள் குறைந்தது 1000 பேருக்காவது அந்த வைரஸ் உள்ள ஊசியைக் குத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கடித்தத்தை யாராவது குற்றவாளி வேண்டும் என்றே அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் அன்னாவுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் வந்துள்ளதால் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மல்லையா குற்றச்சாட்டு:
அன்னா ஹசாரே மத்திய அரசு தன்னை ஏமாற்றியதாகக் கூறி வருகிறார். ஆனால் அவர் தான் பல்வேறு விவகாரங்களில் நாட்டை ஏமாற்றியுள்ளார் என்று கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனர் விஜய் மல்லையா டுவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.