நெல்லை அருகே மான் வேட்டையாடிய வன அதிகாரி: தப்ப வைக்க முயற்சி
புளியங்குடி: நெல்லை அருகே புளியங்குடி வனச்சரகத்தில் வனத்துறை அதிகாரி ஒருவரே மான் வேட்டையாடியது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த அதிகாரியின் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வனவிலங்கு ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்தில் சேர்மறத்தான், டிஎன் புதுக்குடி, புளியங்குடி, கோட்டைமலை, வாசுதேவநல்லூர், தலையணை, நாராயணபுரம், வடக்கு தலையணை உள்பட 9 பீட்கள் உள்ளன. சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வனப்பகுதியில் யானை, மான், மிளா, கரடி, காட்டு எருமை உள்ளிட்ட வனவிலங்குகள் ஆயிரக்கணக்கில் வசிக்கின்றன.
மான்வேட்டை
இங்கு சில ஆண்டுகளாக மான், மிளா, காட்டுப்பன்றி ஆகியன தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. இதில் ஒரு சிலரை வனத்துறையினர் பிடித்தாலும் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அவர்களை விட்டு விடுகின்றனர். இதனால் அவர்கள் மீண்டும் தங்கள் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
கடந்த 3ம் தேதி கோட்டமலை பீட்டில் 3 பேர் கொண்ட கும்பல் ஒரு மானை வேட்டையாடியது. வேட்டையாடிய மானை பைக்கில் கொண்டு வரும்போது வன ஊழியர்கள் மறித்தனர். இதனால் பயந்து போன அவர்கள் 2 பைக், மானை வைத்திருந்த சாக்கு பையையும் போட்டு வி்ட்டு தப்பி விட்டனர்.
15 நாட்களுக்கு மேல் ஆகியும் அவர்களை வனத்துறையினர் கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பான விசாரணையில் இந்த மான் வேட்டையில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்ட வனத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரும், சில முக்கிய பிரமுகர்களும் என தெரிய வந்துள்ளது. இவர்களை காப்பாற்றும் முயற்சியில் அவர்களுடன் வந்த ஒருவருக்கு அபராத தொகை, விதித்து விட்டு இப்பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வனவிலங்குகளை காக்க வேண்டிய வன அதிகாரியே மான் வேட்டையில் ஈடுபட்டது வன விலங்கு ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.