லோக்பால் மசோதாவை ஏற்க மாட்டேன்; உண்ணாவிரதம் இருப்பேன், சிறைகளை நிரப்புவேன்-ஹசாரே
பூனே: அரசு சமர்பித்துள்ள லோக்பால் வரைவு மசோதாவை ஏற்க அன்னா குழவினர் மறுத்துள்ளனர். இதையடுத்து தனது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் அன்னா ஹசாரே வரும் 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதமும், அதையடுத்து வரும் 30ம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டமும் நடத்தவிருக்கிறார்.
இது குறித்து அன்னா ஹசாரே தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள லோக்பால் வரைவு மசோதா திருப்திகரமாக இல்லை. அரசு மக்கள் கருத்தை மதிக்கவில்லை. நம் மக்களை இந்த அரசு ஏமாற்றி வருகிறது. அரசின் இந்த போக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசு அது வழியில் போகட்டும், நான் என் வழியில் போகிறேன்.
வலுவான லோக்பால் மசோதாவை அரசு கொண்டுவரும் என்பது சந்தேகம் தான். ஊழலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசு மக்களின் வேதனையைக் கேட்கவோ, பார்க்கவோ தயாராக இல்லை.
நான் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர். அரசு தான் நாடாளுமன்றத்தை அவமதி்ககிறது. உத்தரகண்ட் மாநிலம் வலுவான லோக்ஆயுக்தா மசோதா தாக்கல் செய்ய முயற்சி மேற்கொண்டது. ஆனால் மத்திய அரசு அது குறித்து கண்டுகொள்ளவேயில்லை. எனது உண்ணாவிரதம் அரசை ஒன்றும் செய்யாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள்.
வலுவான லோக்பால் மசோதா வேண்டி வரும் 27,28,29 ஆகிய தேதிகளில் நான் உண்ணாவிரதம் இருக்கவிருக்கிறேன். அதைத்தொடர்ந்து வரும் 30ம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications