அலுவலகத்தைப் பறித்தால் பிளாட்பார்மில் உட்கார்ந்து பணியாற்றுவேன்- ஸ்டாலின்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி எல்லைக்குள்ளாகவே பொதுமக்களின் குறைகளை கேட்டறிவதற்கும், அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களை கேட்டு, அவற்றை களைவதற்கும் ஏதுவாக கருணாநிதி 1996ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்தபோது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகங்களைகட்டித் தர உத்தரவிட்டு, அதனடிப்படையில் பெரும்பான்மையான தொகுதிகளில் அப்பணி நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில், சென்னையில் ஏற்கனவே இருந்த 14 தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகங்கள் சென்னை மாநகராட்சி சார்பிலும் - பொதுப் பணித்துறையின் சார்பிலும் அமைத்துத் தரப்பட்டுள்ளது.
புதிய சட்டமன்ற தொகுதி
தொகுதிகளின் மறுசீரமைப்பு அடிப்படையில் சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து தொகுதிகளுக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகங்கள் கட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது. 2011 ஜூன் மாதத்தில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேற்சொன்ன ஐந்து சட்டமன்றத் தொகுதி அலுவலகங்கள் கட்டுவதற்கு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனடிப்படையில், கொளத்தூர் தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு கட்டப்பட்டு, எவ்விதப் பயன்பாடும் இல்லாமல் இருந்த, பழைய கட்டிடம் ஒன்றினை சீர்ப்படுத்தி, மாநகராட்சி நிர்வாகத்தினர், தொகுதி அலுவலகமாக தற்போது எனக்கு வழங்கினார்கள்.
தொகுதி குறை தீர்ப்பு
அன்று முதல் தொடர்ந்து, சென்னையில் நான் இருக்கும் சமயங்களில் எல்லாம், வாரத்திற்கு இரண்டு மூன்று முறை அலுவலகத்திற்குச் சென்று பொதுமக்களிடத்தில் குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்து கொண்டு வருகிறேன். இரண்டு பேரை நிரந்தரமாய் அங்கே பணியில் அமர்த்தி, முழுநேரமும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை உரிய துறைகளுக்கு அனுப்பி, தீர்வு காணும் நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அலுவலகம் பறிப்பு
இந்த நிலையில் ஒருசில குறுகிய கண்ணோட்டம் கொண்ட ஆளும்கட்சியினரின் தூண்டுதலின்பேரில் அதிமுக அரசு அந்த அலுவலகத்தை காலி செய்ய தீர்மானம் கொண்டுவந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர் என்கின்ற வகையில் தொகுதி மக்களுக்கு கடமையாற்றும் எனது அலுவலகம் பறிக்கப்படுமேயானால் கொளத்தூர் மையப்பகுதியில் எங்கேயாவது ஒரு நடைபாதையின் நடுவே மேசை-நாற்காலி போட்டுக் கொண்டு என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு கடமையாற்றுவேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications