அழகிரி மகன், ஜாபர்சேட் மனைவி, எல்.கணேசன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு
சென்னை: பொய்யான தகவல்களைக் கூறி வீட்டு வசதி வாரியத்திடிமிருந்து மனை ஒதுக்கீட்டைப் பெற்ற மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, முன்னாள் மதி்முக அவைத் தலைவர் எல். கணேசன், முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோதா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் பதிவாகியுள்ளது.
இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி பால் வசந்தகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து சென்னை ஊழல் ஒழிப்பு இயக்கத் தலைவரான செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நலன் மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய அமைச்சரான மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியிலிருந்து போது அவரிடம் உதவியாளராக இருந்த வெங்கட்ராமன், தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. எல்.கணேசன், போலீஸ் உயர் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன், தி.மு.க. சட்டப்பேரவை முன்னாள் கொறடா சக்ரபாணியின் மனைவி ராஜலட்சுமி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ யசோதா மற்றும் (பாஸ்போர்ட் அதிகாரி) சுமதி ரவிச்சந்திரன் ஆகிய ஏழுபேரும் தமிழ்நாடு வீட்டு வசதிக் கழகத்திட்டம் தங்களுக்கு வீடு ஏதும் இல்லையென்றும், தங்கள் குடும்பத்தினருக்கும் சொந்தமாக வீடு ஏதும் இல்லையென்றும் கூறியதுடன், தாங்கள் மக்களுக்கு சமூக சேவை செய்யும் பொது ஊழியர் என்றும் தங்களுக்கு வீட்டுமனை ஒன்றை சென்னையில் ஒதுக்கவேண்டும் என்றும் கோரி மனு செய்தனர்.
அதன்படி வீட்டு வசதி வாரியமும் அவர்களுக்கு சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் அரசு வீடுகளை ஒதுக்கியுள்ளது. ஆனால் இவர்கள் வீட்டு வசதி வாரியத்திடம் தவறான தகவல்களைக் கூறியுள்ளனர். அவர்கள் கூறிய தகவலில் உண்மை இல்லை. இவர்களுக்கு என்று சொந்தவீடும் உள்ளது.
சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள வசதிகள் உள்ள இவர்கள் தவறான தகவல்களைக் கூறி வாரியத்தை நம்பவைத்துள்ளனர். அவர்கள் கூறிய தகவலின்படி இவர்களுக்கு கீழ்கண்ட இடங்களில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1. தயாநிதி அழகிரிக்கு சோழிங்கநல்லூரில் (அரசாணை எண்.36/7.2.2007/ எண்.71 உயர் வருமானப் பிரிவினருக்கான (எச்.ஐ.ஜி.) மனை ஒதுக்கீடு.
2. சுமதி ரவிச்சந்திரன்(லஞ்சம் வாங்கியதாக சிக்கி பதவியிழந்த பாஸ்போர்ட் அதிகாரி) (அ.எண்.218/13/3/2008 மனை எண்.1050-எச்.ஐ.ஜி.) முகப்பேரில் மனை ஒதுக்கீடு.
3.பர்வீன்-முன்னாள் உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட்டின் மனைவி (அ.எண். 143/5/2009/மனை 540 எச்.ஐ.ஜி.) திருவான்மியூரில் ஒதுக்கீடு.
4. வெங்கட்ராமன் (அ.எண்.509/14.5.2008/மனை-ஏ.பி.2) அண்ணாநகர், மலர் காலனியில் ஒதுக்கீடு.
5. ராஜலட்சுமி சக்ரபாணி (அ.எண்.151/7.3.2008/ம.எண்.1047-எச்.ஐ.ஜி) முகப்பேரில் ஒதுக்கீடு.
6. முன்னாள் எம்.பி. எல்.கணேசன் (முன்னாள் மதிமுக அவைத் தலைவர்) (அ.எண். 157/7.3.2008/மனை எண்.1052-எச்.ஐ.ஜி.) முகப்பேரில் ஒதுக்கீடு.
7. யசோதா-முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. (முகப்பேரில் ஏரி திட்டத்தில் ஒதுக்கீடு.)
இந்த 7 பேரும் பொய்த்தகவல்களைக் கொடுத்து வீடு ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர். இது குறித்து விசாரித்து விசாரித்து இந்த வீட்டுமனை ஒதுக்கீட்டை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி பால் வசந்தகுமார், வழக்கை விசாரணைக்கு ஏற்று, 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கூறி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்புத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications