சசிகலாவுக்கு ஆதரவாக நான் அறிக்கை அனுப்பவில்லை- அலறுகிறார் அதிமுக எம்எல்ஏ செல்வராஜ்
சேலம்: சசிகலா நீக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து தான் எந்த அறிக்கையும் அனுப்பவில்லை என்றும், அது போன்ற தவறான செயலில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும், சேலம் போலீஸ் துணை கமிஷனரிடம் அதிமுக எம்எல்ஏ செல்வராஜ் புகார் அளித்துள்ளார்.
சேலம் தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ செல்வராஜ், மாநகர் மாவட்ட செயலராகவும் உள்ளார். இவர் அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கலியப்பெருமாள், ராவணன் உள்ளிட்டோருடன் நெருக்கமாக இருந்தவர்.
இந்த நிலையில் எம்எல்ஏ செல்வராஜ் பெயரில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து பத்திரிகை அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்பட்டது.
இது தொடர்பாக எம்எல்ஏ செல்வராஜ் மாநகர துணை கமிஷனர் சத்யபிரியாவிடம் புகார் மனு கொடுத்தார்.
அதில் கடந்த 5 ஆண்டுகளாக சேலம் மாநகர் மாவட்ட செயலராக பணியாற்றி வருகிறேன். தற்போது தெற்கு தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் உள்நோக்கம் காரணமாக, என்னை களங்கம் ஏற்படுத்தும் விதமாக, சில விஷமிகள், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக, என் பெயரில் போலி அறிக்கை தயார் செய்து பத்திரிக்கை அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
சேலம் மாவட்டம், குகை, திருச்சி மெயின் ரோட்டில் கதவு எண்.598, கடை எண்.1ல் உள்ள செல்வராஜ் என்பவர் பெயரில் செயல்படும் கடையில் இருந்து, அந்த அறிக்கை பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதம் மூலம் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சில விஷமிகள் முயன்று உள்ளனர். இதனால் நான் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே சம்பந்தப்பட்ட அந்த நபரை கைது செய்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications