முல்லைப் பெரியார் பிரச்சனை - வரும் 28ம் தேதி தேனியில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
தேனி: முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரள அரசை கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் வரும் 28ம் தேதி தேனியில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் க.மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கேரளாவில் விரைவில் ஒரு தொகுதியின் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரள அரசு உதாசீனப்படுத்துகின்றது. மேலும் தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில் அடாவடி செயல்களில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது.
கேரளாவில் வசிக்கும் தமிழர் மற்றும் கேரள மக்கள் இடையே சுமூகமான நட்புடன் வாழ வழிவகை ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி தேனியில் உள்ள மதுரை ரோட்டில் பகவதியம்மன் கோவில் திடலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் உண்ணாவிரதம் டிசம்பர் 28ம் தேதி நடைபெறும்.
இந்த போராட்டத்தை தமிழக அரசின் முன்னாள் டெல்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் துவக்கி வைக்கிறார். கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். உண்ணாவிரத போராட்டத்தை மாலை 5 மணிக்கு தேனி மாவட்ட திமுக செயலாளர் எல்.மூக்கையா முடித்து வைக்கின்றார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications