எம்ஜிஆர் சமாதியில் வைகோ, சீமான் மலர் வளையம் வைத்து அஞ்சலி!
சென்னை: எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அவரது சமாதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பகல் 12 மணிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மறைந்து 24 ஆண்டுகள் ஆகின்றன. மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்த அந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழகமெங்கும் இன்று நடைபெற்று வருகிறது.
கட்சி பாகுபாடின்றி அனைவரும் எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாவட்டங்களில் சின்னச் சின்ன கிராமங்களில் கூட எம்ஜிஆர் படம் வைத்து மாலை அணிவித்து மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
மதிமுக தலைவர் வைகோ இன்று பிற்பகல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன், பால வாக்கம் சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், நிர்வாகிகள் ஆர்.டி. சேதுராமன், சுதர்சனன், பழனி, நவமணி சந்தானம் அஞ்சலி செலுத்தினர்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எம்ஜிஆருக்கு இன்று நினைவஞ்சலி செலுத்தினார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் பெரியார்- எம்.ஜி.ஆர். நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை தங்கச்சாலை மணிக்கூண்டு எதிரில் இன்று (24-ந்தேதி) மாலை நடக்கிறது.
இக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார்.
பேராசிரியர் தீரன், இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே. செல்வமணி, தமிழ் முழக்கம் சாகுல் அமீது, கலைக்கோட்டு தயம், வக்கீல் சந்திரசேகர் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பேசுகிறார்கள்.
ஜேப்பியார்
காலை 6 மணிக்கு எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள் லதா ராஜேந்திரன், ராதா கோபாலகிருஷ்ணன், கீதா மதுமோகன், எம்.ஜி.ஆர். உயில் பொறுப்பாளர் எம். ராஜேந்திரன், சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் இசக்கிமுத்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் சுரேஷ், சங்கரபாண்டியன், ராஜேஷ்கண்ணா, அல்லித்துறை உடன் சென்று இருந்தனர்.
தேசிய அம்பேத்கார் மக்கள் கழக ஒருங்கிணைப்பாளர் ஏ. ஞானசேகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ராஜசேகர், ஜேம்ஸ், சேகரன், மகிமைதாஸ், வெங்கடேசன், மதன், விகே. முத்து, ராமகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் ஷேக் தாவூத், அஸ்மத்துல்லா, முகமது அஜீம் அஞ்சலி செலுத்தினர்.