முல்லைப் பெரியாறு விஷயத்தில் மக்களைப் புரிந்து கொண்டு செயல்படுகிறது மத்திய அரசு- ஜி.கே. வாசன்
சென்னை: முல்லைப் பெரியாறு பிரச்சனையிலும் சரி, கூடங்குளம் பிரச்சனையிலும் சரி மத்திய அரசு மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு நியாயத்தின் அடிப்படையில் தீர்வு காண முயற்சித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு தனது அறிக்கையை வரும் பிப்ரவரி மாதம் சமர்பிக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.
அந்த தீர்ப்பை ஏற்று இரு மாநில அரசுகளும் செயல்பட வேண்டும். அதுவரை இரு மாநில மக்களும் பொறுமையாக இருக்க வேண்டும். தொடர் போராட்டங்கள் நடத்துவதும், சிலர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதும் வருத்தத்திற்குரியது.
முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டப்போவதாக அறிவித்துள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
ஒருவருக்கு எதிராக ஒருவர் செயல்படும்போது தங்கள் எதிர்ப்பைக் காட்ட கறுப்புக்கொடி காட்டுவார்கள். முல்லைப் பெரியாறு பிரச்சனையிலும் சரி, கூடங்குளம் பிரச்சனையிலும் சரி மத்திய அரசு மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு நியாயத்தின் அடிப்படையில் தீர்வு காண முயற்சித்து வருகிறது. எனவே, பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவது சரியல்ல. அதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தேசிய உணவு பாதுகாப்பு மசோதா இந்தியாவில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது. அதன் மூலம் கிராமம் மற்றும் நகரங்களில் குறைந்த விலையில் தானியங்கள் கிடைக்கும். இநத் திட்டம் குறித்து சில மாநில அரசுகள் சில பிரச்சனைகளை முன்வைத்துள்ளன. மத்திய அரசு அதை பரிசீலனை செய்யும்.
லோக்பால் மசோதாவை காங்கிரஸ் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளதே சிறப்பானதாகும். இது ஒரு தொடக்கம் தான், முடிவல்ல. தேவைப்படும்போது திருத்தங்கள் செய்யலாம். அதற்கு ஏற்றவாறு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 7 ஆண்டு காலமாக மத்திய அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக செயல்பட்டு வருகின்றது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் திட்டங்கள் தான் உறுதுணையாக உள்ளன என்று மார்தட்டி சொல்ல முடியும். தமிழக மக்களின் நலன் கருதி கூடங்குளம் அணுமின் நிலையம் உடனே துவங்கப்பட்டு நம் மாநிலத்தின் மின்தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசு முடிவு ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.
சிறுபான்மை மக்களுக்கும், பெரும்பான்மை மக்களுக்கும் இடையே காங்கிரஸ் அரசு பாலமாக உள்ளது. அது சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது என்று பாஜக கூறுவதை மக்கள் நம்பமாட்டார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications