இரு நாடுகள் மோதுவதைப் போன்ற நிலையை கேரளா ஏற்படுத்தி விட்டது- பிரதமரிடம் கருணாநிதி புகார்
சென்னை: ஏதோ இரண்டு நாடுகள் மோதிக் கொள்வதைப் போன்ற நிலையை கேரளா ஏற்படுத்தி விட்டது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு சுமூகத் தீர்வு காண உதவ வேண்டும் என்று பிரதமரிடம் திமுக தலைவர் கருணாநிதி மனு கொடுத்துள்ளார்.
சென்னை வந்திருந்த பிரதமர் மன்மோகன் சிங்கை முதல் ஆளாக நேற்று இரவு முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் இன்று காலை பிரதமரை, திமுக தலைவர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். அப்போது ஒரு மனு ஒன்றை அவர் அளித்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஏதோ இரு நாடுகளுக்கு இடையிலான மோதலைப் போல தமிழகத்திலும், கேரளாவிலும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு முக்கியக் காரணம் கேரள அரசுதான். அதுதான் இந்த நிலையை ஏற்படுத்தி விட்டது.
இரு மாநில மக்களும் இரு நாட்டு மக்களைப் போல மோதிக் கொண்டுள்ளனர். இந்த நிலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
கேரள அரசு தொடர்ந்து அணை குறித்தும், இரு மாநில மக்களுக்கிடையே பகைமையை அதிகரிக்கும் வகையில் பேசி வருகிறது, செயல்பட்டு வருகிறது. கேரளாவில் காலம் காலமாக வசித்து வரும் தமிழர்களை அங்கிருந்து வெளியேறச் செய்யும் நிலையை அது உருவாக்கி விட்டது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உணர்ச்சிப்பூர்வமான கொந்தளிப்பு ஏற்பட்டு விட்டது. அதுதான் தற்போது போராட்டங்களாக அங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலை உடனடியாக மாறாவிட்டால், குறைக்கப்படாவிட்டால் நிரந்தர காயமாக அது இரு மாநில உறவிலும் படிந்து விடும் அபாயம் உள்ளது. இரு மாநில மக்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவு பெரிதாகி விடும் வாய்ப்பு உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தின் முன்பு உள்ளது. எனவே அணையின் நீர்மட்ட அளவைக் குறைக்க கேரள அரசு எந்த நடவடிககை எடுத்தாலும் அது கோர்ட் அவமதிப்பாக அமையும், நீதித்துறைக்கு விடப்படும் மாபெரும் சவாலாக அமையும். தமிழக மக்களுக்கு அநீதி இழைப்பதாக அமையும்.
தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையை பலவிதங்களிலும் பலப்படுத்திய பின்னரும், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தாமல் தொடர்ந்து 136 அடியாகவே வைத்திருக்கிறது கேரள அரசு. தற்போது அதை மேலும் குறைத்து 120 அடியாக குறைக்க முயற்சிக்கிறார்கள். உச்சநீதிமன்ற உத்தரவுகளை கேரள அரசு சற்றும் சட்டை செய்யாமல் உள்ளது.
கேரள அரசு தனது நிலையில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்கள் வறட்சிப் பிரதேசமாக மாறும் அபாயம் உள்ளது. பாலைவனங்களாக அவை மாறி விடும்.
எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கூறியபடி 142 அடியாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துமாறு கேரள அரசை வலியுறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளம் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கருணாநிதி.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை, ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, டிகேஎஸ் இளங்கோவன், கனிமொழி அடங்கிய 12 பேர் கொண்ட குழுவினரும் சென்றனர். 20 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விரிவான மனு ஒன்றையும் பிரதமரிடம், அளிக்கப்பட்டது.
தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக கேரள அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை, அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைப்பதற்கும், புதிய அணை கட்டுவதற்கும் கேரள அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கருணாநிதி விளக்கி கூறினார்.
இதனைக் கேட்டுக்கொண்ட பிரதமர், இரு மாநிலங்களிலும் அமைதியும், சுமூகமான வாழ்க்கை முறையும் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய அரசே மேற்கொள்வது குறித்து பரிசீலிப்பது அவசியம் என்று தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications