மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்திற்கு நெஞ்சுவலி- மருத்துவமனையில் அனுமதி
சென்னை: மத்திய நிதித்துறை இணை அமைச்சர் இதய வலி காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டுநாள் பயணமாக ஞாயிறுக்கிழமையன்று சென்னை வந்த பிரதமர் பிரதமர் மன்மோகன்சிங்கை வரவேற்பதற்காக பழனிமாணிக்கம் விமான நிலையம் சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அவர் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயத்தில் அடைப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தற்போது சிகிச்சை முடிந்து அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில்தான் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இதேபோல பிரச்சினை ஏற்பட்டு இதே ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு பின்னர் வீடு திரும்பினார் என்பது நினைவிருக்கலாம்.