கிளைமேக்ஸ் நெருங்குது.. விஜய் வீட்டுக்கு வந்தப்பவே ஆரம்பிச்ச வைகோ ஸ்கெட்ச்.. நாளை மதிமுகவின் முடிவு?
சென்னை: திமுக மற்றும் மதிமுக இடையிலான அரசியல் உறவில் தொடர்ந்து சலசலப்புகள் நீடித்து வருகின்றன. மற்றொருபக்கம் தவெக அரசுடனான நெருக்கத்தை மதிமுக அதிகரித்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், வைகோவின் மதுரை பேட்டியானது, திமுக கூட்டணியின் விரிசலை பகிரங்கப்படுத்தியுள்ளது. இந்த அரசியல் பரபரப்புகளுக்கு நடுவே, நாளை ஜூன் 27ம் தேதி நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணியை மாற்றும் இறுதி முடிவை வைகோ அறிவிப்பார் என ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது...!!!
கடந்த மே மாதம் தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்தே திமுகவுக்கும், மதிமுகவுக்கும் இடையிலான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

திமுக கூட்டணியில் மதிமுக
இதற்கான கிளைமாக்ஸ் நாளை ஜூன் 27ம் தேதி நடைபெற உள்ள மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் அமையப் போகிறது. திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துடன் கரம் கோர்ப்பதா என்ற விவாதங்களுக்கு நாளை அதிகாரப்பூர்வமாக விடை கிடைக்கப் போகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றார்.
"தன்னுடைய இல்லத்திற்கு வந்த முதல் முதலமைச்சர்" என்று வைகோ நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டபோதே, 2 கட்சிகளுக்கும் இடையிலான புதிய நெருக்கம் தொடங்கிவிட்டது போல தெரிந்தது.
தவெகவுடன் நெருக்கம்
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், திமுக வெளிநடப்பு செய்த போதிலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தனர். இது மதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு தவெகவை நோக்கியே இருக்கும் என்பதை லேசாக உணர்த்தியது.
இதற்கு பிறகு திருச்சியில் முதலமைச்சர் விஜய்யை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேரில் வரவேற்றதும், "துரதிர்ஷ்டவசமாக நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம்; அதனால் தவெகவிற்கு ஆதரவு அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது" என்று வெளிப்படையாக சொன்னதுமே, திமுக ஆடிப்போய்விட்டது.
வைகோ அதிருப்தி
ஏனென்றால், கடந்த 2017 முதல் திமுகவுடன் பயணித்து வந்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும் தங்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்திய நிலையில், மதிமுகவின் சுயமரியாதையைக் காயப்படுத்துவதாகவே இருந்து வந்தது. இந்த மனக்கசப்புதான் மெல்ல மெல்ல தவெகவுடனான நெருக்கமாக மாறிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இப்போது மதுரையில் வைகோ ஒரு பேட்டி அளித்துள்ளார்.. அதில், "xகிளைகள் கூட இல்லாத கட்சிக்கு 8 இடங்கள், காணாமல் போகும் நிலையில் இருந்த கட்சிக்கு 10 இடங்களுடன் ராஜ்யசபா சீட் கொடுத்தனர். சுயமரியாதையையும் தன்மானத்தையும் இழந்து 9 ஆண்டுகள் பயணித்தோம்.
கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டு, மற்றொரு புறம் வேறு விதமாகப் பேசும் கட்சிகளின் நிலைப்பாடு அபூர்வமானது" என்று விசிகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்..
வைகோவின் இந்த பேட்டியும், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக முற்றிலும் வெளியேறுவதை உறுதி செய்யும் வகையிலேயே அமைந்துள்ளன.
நாளை மதிமுக பொதுக்குழு
துரை வைகோ உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அனைவரும் தவெக கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்ட சூழலில், நாளைய பொதுக்குழுவில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
உதயசூரியன் சின்னத்தில் வென்ற இரண்டு எம்.எல்.ஏக்களின் பதவி நிலை என்னவாகும், தவெகவுடன் அதிகாரப்பூர்வமாக எப்போது கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்பது போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் நாளைய பொதுக்குழுவில் வைகோவின் அதிரடி முடிவின் மூலம் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications