அமெரிக்காவுக்கு சீனா கொடுத்த மரண அடி... ‘லைன்ஷைன்’ கம்ப்யூட்டரை பார்த்து வாயை பிளக்கும் உலகம்
பெய்ஜிங்: அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசைப் பட்டியல் ஆண்டுக்கு இரண்டு முறை வெளியிடப்படுவது வழக்கம். சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர்கள் மற்றும் கணினி வல்லுனர்கள் அடங்கிய "டாப்500" என்ற அமைப்பை சேர்ந்த குழு புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.. இதில் சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மையத்தில் நிறுவப்பட்டிருக்கும் 'லைன்ஷைன்' என்ற கம்ப்யூட்டர் முதலிடத்தை பெற்றிருக்கிறது. இது வினாடிக்கு 2 குவிண்டில்லியனுக்கும் அதிகமான வேகத்தில் கணக்கீடுகள் செய்துள்ளது.
உலகில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்து தரவரிசைப்படுத்தும் சர்வதேச அமைப்பான TOP500, ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச சூப்பர் கம்யூட்டிங் மாநாட்டில் ( ISC 2026 ) மாநாட்டில் தனது 67-வது அதிகாரப்பூர்வப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் சீனாவின் 'LineShine' முதலிடத்தில் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிபுயுவில் மட்டுமே இயங்குகிறது
பொதுவாக இன்றைய சூப்பர் கம்ப்யூட்டர்கள் அதிவேகமாகச் செயல்பட என்விடியா போன்ற நிறுவனங்களின் பல ஆயிரம் ஜிபியு கிராபிக்ஸ் கார்டுகளைச் சார்ந்துதான் உருவாக்கப்படுகின்றன.ஆனால், லைன்ஷைன் முழுக்க முழுக்க சிபியு கொண்டு மட்டுமே இயங்குகிறது. அமெரிக்காவின் தொழில்நுட்பத் தடைகளை உடைப்பதற்காக, சீனா தனது சொந்த வடிவமைப்பான லிங்குன் கட்டமைப்பில், 1.37 கோடிக்கும் அதிகமான கோர்களைக் கொண்ட ஹுவாவே நிறுவனத்தின் LX2 பிராசஸர்களை இதில் பயன்படுத்தியுள்ளது.இதனை தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தலைசுற்ற வைக்கும் வலையமைப்பு
இந்த ஒரே ஒரு கம்ப்யூட்டருக்குள் மொத்தம் 1.37 கோடிக்கும் அதிகமான (13,789,440) சிபியு கோர்கள் உழைக்கின்றன. இது 90 பிரம்மாண்ட கணினி கேபினட்களில், 22,000-க்கும் மேற்பட்ட கணினி முனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 1.5 பெட்டாபைட் அளவிலான அதிவேக HBM மெமரியும், 11.6 பெட்டாபைட் அளவிலான பாரம்பரிய DDR5 ரேம் மெமரியும் உள்ளது.
வினாடிக்கு 2.198 எக்ஸாஃப்ளாப்ஸ்
இது வினாடிக்கு 2.198 எக்ஸாஃப்ளாப்ஸ் (Exaflops) வேகத்தில் கணக்கீடுகளைச் செய்யும் திறன் கொண்டது. அதாவது, வினாடிக்கு 2 குவிண்டில்லியன் (Quintillion - 2 பில்லியனுக்குப் பின் 9 பூஜ்ஜியங்கள்) கணக்குகளைத் துல்லியமாகச் செய்யும். உலகிலேயே 2 எக்ஸாஃப்ளாப்ஸ் வேகத் தடையைத் தாண்டிய முதல் சூப்பர் கம்ப்யூட்டர் இதுதான். அமெரிக்காவின் விண்டோஸ் அல்லது பிற ஆப்பரேட்டிங் சிஸ்டம்களைப் பயன்படுத்தாமல், சீனா தனக்கென உருவாக்கிய 'கிலின் ஓஎஸ்' (Kylin OS) என்ற இயங்குதளத்தில் இது செயல்படுகிறது. கணினிகளுக்கு இடையே தரவுகளை நொடிப் பொழுதில் பரிமாறிக் கொள்ள 'லிங்கி' என்ற அதிவேக உள்நாட்டு நெட்வொர்க் தொழில்நுட்பம் உள்ளது. இந்த ஒற்றை சூப்பர் கம்ப்யூட்டர் இயங்குவதற்கு மட்டும் சுமார் 42.2 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இது ஒரு சிறிய நகரத்திற்கே தேவையான மின்சார அளவுக்குச் சமமாகும்.
அமெரிக்காவை முந்தி சீனா முதலிடம்
இதுவரை உலகின் அதிவேக கம்ப்யூட்டராக முதலிடத்தில் இருந்த அமெரிக்காவின் "எல் கேபிடன்" என்ற கம்ப்யூட்டரை விட இது 20 சதவீதம் கூடுதல் வேகம் கொண்டதாக உள்ளது. அது இப்போது 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 2017-ம் ஆண்டுக்கு பிறகு சீனா இந்த பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பெற்றிருக்கிறது. அமெரிக்கா விதித்த கடுமையான தொழில்நுட்பத் தடைகளை மீறி சீனா இந்தச் சாதனையைச் செய்துள்ளதுதான் உலக அரங்கில் வியப்பாதாகும். சீனாவின் 'லைன்ஷைன்' கம்ப்யூட்டர் பொதுவான அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் கணக்கீடுகளில் அதிவேகமாகச் செயல்பட்டாலும், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சார்ந்த பணிகளுக்கான சோதனையில் இது உலகளவில் 4-வது இடத்தில்தான் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், இதில் ஏ.ஐ பணிகளை வேகப்படுத்தும் தனித்துவமான ஜிபியு கார்டுகள் இல்லாததுதான்.
அமெரிக்கத் தடைகளின் தோல்வி
சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை முடக்க வேண்டும் என்பதற்காக, மேம்பட்ட கணினி சிப்கள் மற்றும் செமிகண்டக்டர் கருவிகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்திருந்தது. ஆனால் சீனா அமெரிக்காவின் என்விடியா (Nvidia) அல்லது ஏஎம்டி (AMD) போன்ற நிறுவனங்களின் சிப்களைப் பயன்படுத்தாமல், முழுக்க முழுக்கத் தனது சொந்த வடிவமைப்பான LX2 பிராசஸர்களை வைத்தே உலகின் அதிவேக கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளது. இது அமெரிக்காவின் ஏற்றுமதித் தடைகள் மற்றும் புவிசார் அரசியல் உத்திகள் தோற்றுவிட்டன என்பதை உலகுக்குக் காட்டும் சவாலாக மாறியுள்ளது.
சீனாவின் சவால்
இதுவரை உலகளாவிய சூப்பர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்திலும், மென்பொருட்களிலும் அமெரிக்கா மட்டுமே ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வந்தது.ஆனால் சீனாவின் லைன்ஷைன் கம்ப்யூட்டர் அமெரிக்காவின் எந்தவொரு மென்பொருளையும் நம்பியிருக்காமல், சீனாவின் சொந்த 'கிலின் ஓஎஸ்' மற்றும் 'லிங்கி' நெட்வொர்க் கட்டமைப்பில் இயங்குகிறது. இதன் மூலம் கணினி உள்கட்டமைப்பில் அமெரிக்காவைச் சாராமல் சீனா "தன்னிறைவு" அடைந்துவிட்டதை நிரூபித்துள்ளது.
சீனாவிற்கு என்ன நன்மை
சூப்பர் கம்ப்யூட்டர்களின் அதிவேகம் என்பது வெறும் கணக்குகளைப் போடுவதற்கு மட்டுமல்ல; அவை நாட்டின் பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கு மிக முக்கியமானவை ஆகும். அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் வடிவமைப்பு , அணுஆயுதச் சோதனைகளின் டிஜிட்டல் மாதிரிகள், சைபர் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளில் அமெரிக்காவின் 'El Capitan' கம்ப்யூட்டரை விட சீனாவின் லைன்ஷைன் 20% கூடுதல் வேகத்தில் செயல்படும். இது பாதுகாப்புத் துறையில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்குப் பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.
அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி வேகம்
காலநிலை மாற்றம் , புதிய மருந்துகளைக் கண்டறிதல் மற்றும் குவாண்டம் இயற்பியல் போன்ற சிக்கலான அறிவியல் ஆராய்ச்சிகளை அமெரிக்க விஞ்ஞானிகளை விட சீன விஞ்ஞானிகள் மிக வேகமாகவும் துல்லியமாகவும் செய்து முடிக்க இந்த 2 எக்ஸாஃப்ளாப்ஸ் வேகம் வழிவகுக்கும். இது உலகளாவிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் சீனாவை முன்னிலைக்குக் கொண்டு செல்லும் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஏ.ஐ ரேஸில் அடுத்தகட்ட பாய்ச்சல்
லைன்ஷைன் கம்ப்யூட்டர் தற்போதைய ஏ.ஐ சோதனைகளில் (HPL-MxP benchmark) உலகளவில் 4-வது இடத்தில்தான் உள்ளது. ஏஐ-க்குத் தேவையான பிரத்யேக ஜிபியு கிராபிக்ஸ் கார்டுகள் இதில் இல்லை என்பது தற்போதைக்கு அமெரிக்காவுக்குச் சாதகமான விஷயம். எனினும் சிபியு தொழில்நுட்பத்திலேயே சீனா இந்த அளவுக்கு அசுர வளர்ச்சியை எட்டியிருப்பதால், மிக விரைவில் ஏ.ஐ பணிகளுக்கான பிரத்யேக உள்நாட்டு சிப்களையும் தயாரித்து, செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் அமெரிக்காவைத் முந்திவிடுமோ என்ற அச்சத்தை அமெரிக்காவுக்கு இருக்கிறது.














Click it and Unblock the Notifications