"நீ ஒரு பைத்தியம்.." கண்கள் சிவந்த டிரம்ப்.. இஸ்ரேல் பிரதமர் மீது உச்சக்கட்ட கோபத்தில் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் போர், அமெரிக்கா- ஈரான் போர் காலங்களில் இந்த உறவு பாதிக்கப்பட்டதாம். குறிப்பாக இஸ்ரேலை மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கும் அளவுக்கு டிரம்ப் கோபமடைந்ததாக ரிப்போர்ட்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் மேகி ஹேபர்மேன் மற்றும் ஜொனாதன் ஸ்வான் ஆகியோர் அதிபர் டிரம்ப் தொடர்பாகப் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் டிரம்பின் இரண்டாவது அதிபர் பதவிக்காலம் மற்றும் உலகத் தலைவர்களுடன் அவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்த விவகாரங்கள் உள்ளன. அப்படி தான் இஸ்ரேலுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த விவரங்களும் அதில் இருக்கிறது.

பிரஷர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடத்திய தொலைப்பேசி உரையாடலின் போது, ஹமாஸ் அமைப்புடன் போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்குமாறு கடுமையாகப் பேசியதாகவும், மிகவும் கடுமையாக அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த வேளையில், இந்த உரையாடல் நடைபெற்றதாக அந்தப் புத்தகம் கூறுகிறது.
கத்தாரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்புக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்தது. அதாவது அங்கு ஹமாஸ் அமைப்பின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கலீல் அல்-ஹய்யா மற்றும் அவரது மகன் உள்ளிட்ட குழுவினர் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஒரு தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த டிரம்ப் தீவிரமாக முயன்று வந்த நிலையில், இஸ்ரேலின் இந்த ராணுவ நடவடிக்கை தற்போதைய அமைசி பேச்சுவார்த்தை முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாக டிரம்ப் கடும் கோபமடைந்தார்.
விரக்தி
இதனையடுத்து நெதன்யாகுவுடன் பேசிய டிரம்ப், இஸ்ரேலின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் தனது விரக்தியை வெளிப்படுத்தியதோடு, போர்நிறுத்த முன்மொழிவை ஏற்குமாறு வலியுறுத்தினார். அவர் மேலும், "உங்களைப் பாதுகாப்பதற்காக நான் எல்லாவற்றையும் செய்துள்ளேன்.. எனவே இதற்கு நீங்கள் உடன்படுவது நல்லது! இது மிகவும் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இப்போது உங்களை நினைத்து எல்லாரும் வெறுப்படைந்துவிட்டார்கள் பிபி (நெதன்யாகுவின் பெயர்)!" என்று டிரம்ப் அவரிடம் கடுமையாகக் கூறியதாக அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோபம்
இந்த உரையாடலின் போது, டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் உடன் இருந்ததாக அப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. டிரம்பின் மிக நெருக்கமான யூத பாட்னர்களும் கூட இந்த நீண்டகால மோதலால் விரக்தியடைந்துள்ளனர் என்றும் அவர்கள் விரைவில் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட விரும்புகிறார்கள் என்றும் நெதன்யாகுவிடம் டிரம்ப் கூறினார். இறுதியில், அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த முன்மொழிவை நெதன்யாகு ஏற்றுக்கொண்டார் என்றும் கத்தாரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மிகவும் நுணுக்கமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து நெதன்யாகுவை ஒரு "பைத்தியக்காரர்" என்று டிரம்ப் குறிப்பிட்டதாக ஹேபர்மேன் மற்றும் ஸ்வான் எழுதியுள்ளனர். இஸ்ரேலின் இந்த தன்னிச்சையான ராணுவ நடவடிக்கைகள் போர் நிறுத்த முயற்சியை சீர்குலைப்பதோடு, மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று டிரம்ப் நம்பினார்.
நான் தான் பாதுகாப்பு தருகிறேன்
நெதன்யாகுவிற்கு தான் அளித்து வரும் ஆதரவை நினைவூட்டிய டிரம்ப், "போர்க்கால நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உட்பட சர்வதேச அளவில் அதிகரித்து வரும் அழுத்தங்களில் இருந்து நெதன்யாகுவை நான் தான் பாதுகாத்து வருகிறேன். ஆனால், அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்" என்று வெறுப்படைந்து கூறியிருக்கிறார்.
இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையோ அல்லது நெதன்யாகுவின் அலுவலகமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications