போதைப்பொருள் விழிப்புணர்வு மராத்தானில் நடந்த சம்பவம்.. முதல்வர் விஜய் செய்த செயல்.. இளம்பெண் நெகிழ்ச்சி
சென்னை: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற 'Start Run, Stop Drugs' விழிப்புணர்வு மாரத்தானில் முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்று பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
அரசின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடந்த இந்த மாரத்தான், தற்போது ஒரு இளம்பெண் பேசிய உருக்கமான வீடியோவால் மேலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இளம் பெண் உருக்கம்
மாரத்தானில் முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து ஓடிய அந்த இளம்பெண் பேசும்போது, "எனக்கு இன்னும் 18 வயசுதான் ஆகுது. ஆனா கொஞ்சம் தூரம் ஓடியதுக்கே எனக்கு மூச்சு வாங்கிடுச்சு. ஆனால் 54 வயசான நம்ம முதலமைச்சர் விஜய் இளைஞர் மாதிரி வேகமாக ஓடிக்கொண்டே இருந்தார். அவருடன் மாரத்தானில் ஓட வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். இன்று அந்த கனவு நிஜமாகிவிட்டது" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும், "நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாரத்தான் போட்டிகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் இந்த வருடம் மட்டும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா முதலமைச்சர் விஜயுடன் சேர்ந்து ஓடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை என்னால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது" என்றும் அவர் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியதும், தவெக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பல இளைஞர்களும் பகிர்ந்து வருகின்றனர். "54 வயசுலயும் இப்படியா ஃபிட்னஸ்?", "முதல்வர் என்று மேடையில மட்டும் இல்லாமல், களத்திலேயே இறங்கி இளைஞர்களுடன் ஓடுறாரே!", "இது தான் இளைஞர்களுக்கு உண்மையான மோட்டிவேஷன்" என்ற கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன.

போதை பொருள் விழிப்புணர்வு மராத்தான்
மாரத்தானுக்கு முன்பு, முதலமைச்சர் விஜய் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து வாசித்தார். அதன் பிறகு "விளையாட்டை எடு... போதையை விடு" என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு, அவரும் நேரடியாக ஓட்டத்தில் கலந்து கொண்டு இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.
கடந்த சில நாட்களாக சட்டப்பேரவையில் தனது பேச்சால் அரசியல் களத்தில் கவனம் ஈர்த்திருந்த முதலமைச்சர் விஜய், இன்று மெரினா மாரத்தானில் தனது உடற்திறன் மற்றும் நேரடி பங்கேற்பால் மீண்டும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளார்.
இதையடுத்து நெட்டிசன்கள் பலரும், "18 வயசு பொண்ணுக்கே மூச்சு வாங்குது... 54 வயசுல CM விஜய் இப்படி ஓடுறாரே!", "வயசு ஒரு நம்பர் தான் என்பதை மீண்டும் நிரூபிச்சுட்டாரு", "மேடையில பேசுறதுக்கு மேல களத்தில இறங்கி காட்டுறது தான் பெரிய விஷயம்" என்று தொடர்ந்து பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். தற்போது அந்த இளம்பெண்ணின் வீடியோவும், முதலமைச்சர் விஜயின் மாரத்தான் காட்சிகளும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.














Click it and Unblock the Notifications