விஜய், அஜித், மாதவன் முத்திரைப் பதித்த 2000-ம் ஆண்டு தமிழ் சினிமா! காதலைக் கொண்டாடிய மில்லினியம்!
சென்னை: 90-களின் இறுதியிலிருந்து புதிய மில்லினியத்திற்குள் (2000) அடியெடுத்து வைத்தபோது, உலகமே 'Y2K' கணினிப் பிரச்சனை வந்துவிடுமோ என்று ஒருபுறம் பயந்து கொண்டிருந்தது. ஆனால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கோ அந்த ஆண்டு ஒரு மாபெரும் கொண்டாட்டமாகவே அமைந்தது. சிடி (CD) மற்றும் டிவிடிக்களின் வருகை மெல்ல ஆரம்பித்திருந்தாலும், ஆடியோ கேசட்டுகளின் பொற்காலம் அது. ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார் என இசையமைப்பாளர்களின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது.
2000-ம் ஆண்டு தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு 'காதல் வருடம்' என்றே சொல்லலாம். தமிழ் சினிமா வரலாற்றில் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் பல கிளாசிக் காதல் திரைப்படங்கள், அழுத்தமான குடும்பப் படங்கள், மற்றும் விவாதங்களை கிளப்பிய காவியங்கள் என அனைத்தும் இந்த ஒரே ஆண்டில் அணிவகுத்து வந்தன. விஜய் - அஜித் இருவரது திரைப்பயணத்திலும் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. புதிய சாக்லேட் பாயாக மாதவன் அறிமுகமாகி பெண்களின் தூக்கத்தைக் கெடுத்தார்.

ஸ்மார்ட்போன்களும், ஓடிடி தளங்களும் ஆக்கிரமிக்காத அந்த அழகிய காலகட்டத்தில், தியேட்டர்களில் திருவிழா கோலம் பூண்ட 2000-ம் ஆண்டின் அழிக்க முடியாத திரைக் காவியங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்!
அலைபாயுதே, தமிழ் சினிமாவின் புதிய காதல் இலக்கணம்
அதுவரை தமிழ் சினிமா காதலைப் பேசிய விதத்தை அடியோடு மாற்றி அமைத்த திரைப்படம் 'அலைபாயுதே'. காதலித்து திருமணம் செய்துகொள்வதோடு திரைப்படங்களை முடித்துக்கொள்ளும் வழக்கத்திற்கு மத்தியில், "திருமணத்திற்குப் பிந்தைய காதலும் மோதலும்" எப்படி இருக்கும் என்பதை மணிரத்னம் தனது மேஜிக்கை திரையரங்கில் அரங்கேற்றினார்.
மாதவன் எனும் மேஜிக்: தமிழ் சினிமாவுக்கு அதுவரை அறிமுகமில்லாத ஒரு புதிய வசீகரம் மாதவன் முகத்தில் இருந்தது. 'கார்த்திக்' என்ற கதாபாத்திரத்தில் அவர் செய்த குறும்புகளும், ஷாலினியிடம் (சக்தி) அவர் காதலை வெளிப்படுத்திய விதமும் ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஈர்த்தது.

ரயிலில் பூத்த காதல்: புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் இளைஞர்களின் காதலை இவ்வளவு அழகாக யாராலும் காட்சிப்படுத்த முடியாது. "நீ அழகா இருக்கேன்னு நெனைக்கல..." என்ற வசனம் இன்றுவரை காதலர்களின் தேசிய வசனம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை: "பச்சை நிறமே", "காதல் சடுகுடு", "என்றென்றும் புன்னகை", "சினேகிதனே" என ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கதை பேசும். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு பாடல்களுக்கு உயிரூட்டியது. அலைபாயுதே ஒரு திரைப்படம் அல்ல, அது பல தலைமுறைகளைத் தாண்டி வாழும் ஒரு உணர்வு. பல காதலர்களை, காதலை சொல்ல தூண்டிய நிகழ்வு..
குஷி, ஈகோவும் காதலும் செய்த மாயாஜாலம்
ஒரு முழு திரைப்படத்தையும் வெறும் 'ஈகோ' (Ego) என்ற ஒற்றை புள்ளியை வைத்துக்கொண்டு, அதை சுவாரஸ்யமாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற வைக்க முடியுமா? முடியும் என நிரூபித்துக் காட்டினார் எஸ்.ஜே.சூர்யா.
விஜய் - ஜோதிகா கெமிஸ்ட்ரி: சிவா மற்றும் ஜெனிஃபர் கதாபாத்திரங்களில் விஜய்யும் ஜோதிகாவும் போட்டிப்போட்டுக் கொண்டு நடித்திருந்தனர். நண்பர்களாக இருக்கும் இருவருக்குள் காதல் பூக்கிறது, ஆனால் அதை வெளிப்படுத்த இருவரது ஈகோவும் தடுக்கிறது என்ற சிம்பிளான லைனை திரைக்கதையின் மாயாஜாலத்தால் கட்டிப்போட்டார் எஸ்.ஜே.சூர்யா.
ட்ரெண்ட் செட்டர்: ஜோதிகாவின் துறுதுறுப்பான நடிப்பு, விஜய்யின் ஸ்டைலிஷ் அப்ரோச் ஆகியவை இப்படத்தை பிளாக்பஸ்டர் ஆக்கின. விஜய்யின் திரைப்பயணத்தில் இது ஒரு மிகப்பெரிய மைல் கல்.

தேவாவின் இசை திருவிழா: "மேக்கரீனா", "கட்டிப்புடி கட்டிப்புடிடா", "ஒரு பொண்ணு ஒன்னு", "மொட்டு ஒன்று" என தேவாவின் இசையில் அத்தனை பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. இன்றும் தொலைக்காட்சிகளில் குஷி ஒளிபரப்பானால் ரிமோட்டை கீழே வைத்துவிட்டு பார்க்கும் ரசிகர்கள் ஏராளம்.
ஹே ராம், கமல்ஹாசனின் காலத்தை தாண்டிய படைப்பு
2000-ம் ஆண்டில் வெளியான மிக முக்கியமான, ஆனால் அந்த நேரத்தில் பலரால் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு காவியம் 'ஹே ராம்'. கமல்ஹாசனே எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்திருந்த இப்படம் இந்தியப் பிரிவினை, காந்தி கொலை போன்ற வரலாற்று பின்னணியில் உருவானது.
வரலாறும் புனைவும்: சாகேத் ராம் என்ற கதாபாத்திரத்தின் மூலம், மதவெறியும் பழிவாங்கும் உணர்வும் ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்பதை நுட்பமாகப் பதிவு செய்திருந்தார் கமல். வரலாற்று நிகழ்வுகளோடு ஒரு கற்பனை கதாபாத்திரத்தை நேர்த்தியாகப் பின்னப்பட்ட விதம் உலகத் தரம் வாய்ந்தது.
பிரம்மாண்ட கூட்டணி: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, ஓம் புரி என இந்திய சினிமாவின் பல ஜாம்பவான்கள் இதில் இணைந்திருந்தனர்.

இசை மற்றும் தொழில்நுட்பம்: இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் ஆன்மாவாக அமைந்தன. "நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி" பாடல் சிம்பொனி தரத்தில் அமைந்திருக்கும். இன்று இந்த படம் ஒரு கல்ட் கிளாசிக் (Cult Classic) ஆக சினிமா மாணவர்களால் கொண்டாடப்படுகிறது.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், நாவல் தந்த காவியம்
ஜேன் ஆஸ்டினின் (Jane Austen) புகழ்பெற்ற நாவலான 'சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி' (Sense and Sensibility) நாவலைத் தழுவி, அதை தமிழ் நெட்டிவிட்டிக்கு ஏற்ப மிக அழகாக செதுக்கியிருந்தார் இயக்குநர் ராஜீவ் மேனன்.
நட்சத்திர பட்டாளம்: மம்முட்டி, அஜித், ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ், ஸ்ரீவித்யா என ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனித்துவமான தன்மை கொடுக்கப்பட்டிருந்தது.

அஜித்தின் முதிர்ச்சி: ஆக்ஷன் ஹீரோவாகவும், சாக்லேட் பாயாகவும் வளர்ந்து வந்த அஜித், இதில் மனோகர் என்ற இயல்பான இயக்குநராகும் கனவோடு போராடும் இளைஞனாக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். தபுவுக்கும் அஜித்துக்கும் இடையிலான முதிர்ச்சியான காதல் காட்சிகள் அபாரம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் கிளாசிக் இசை: "கண்ணாமூச்சி ஏனடா", "என்ன சொல்லப் போகிறாய்", "சந்தனத் தென்றலை" என கர்நாடக சங்கீத சாயலில் அமைந்த பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை. பாடகர் சங்கர் மகாதேவனுக்கு "என்ன சொல்லப் போகிறாய்" பாடலுக்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
முகவரி, கனவுகளும் குடும்பப் பொறுப்பும்
ஒரு கலைஞனின் போராட்டத்தையும், அவனுக்கு ஆதரவாக நிற்கும் அவனது குடும்பத்தையும் மையமாக வைத்து வி.இசட்.துரை இயக்கிய படம் 'முகவரி'. அஜித்குமார் திரைப்பயணத்தில் இது மிக முக்கியமான படம்.
போராடும் இளைஞனின் குரல்: ஒரு சிறந்த இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவோடு பல அவமானங்களைச் சந்திக்கும் ஸ்ரீதர் கதாபாத்திரத்தில் அஜித் வாழ்ந்திருந்தார். தனது தம்பியின் கனவுக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் அண்ணனாக ரகுவரன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

யதார்த்தமான கிளைமேக்ஸ்: அந்த காலகட்டத்தின் வாழ்வியல் யதார்த்தமான, காதலா? கனவா? குடும்பமா? என்ற குழப்பத்தில் தவிக்கும் இளைஞனின் மனநிலையை படம் அச்சு அசலாகப் படம்பிடித்துக் காட்டியது. ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட யதார்த்தமான சோகமான கிளைமேக்ஸ் (கனவு நிறைவேறாதது போல்) ரசிகர்களை வெகுவாகப் பாதித்தது. பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிளைமேக்ஸ் மாற்றப்பட்டது என்பது வரலாறு.
தேவாவின் மெலடி: தேவாவின் இசையில், "ஓ... நெஞ்சே", "கீச்சு கிளியே" பாடல்கள் கனவுகளைத் துரத்தும் ஒவ்வொரு இளைஞனின் தேசிய கீதமாக ஒலித்தது.
ரிதம், ஆழமான, அமைதியான கல்ட் கிளாசிக் காதல்
காதல் என்றால் இளமை, துள்ளல் என்று மட்டுமே பார்த்துப் பழகிய தமிழ் சினிமாவுக்கு, மனைவியை இழந்த ஒருவருக்கும், கணவனை இழந்த ஒருவருக்கும் இடையில் முகிழ்க்கும் முதிர்ச்சியான காதலை மிக நாசூக்காகவும், கவித்துவமாகவும் சொல்லிய படம் 'ரிதம்'.
வசந்தின் நுட்பமான இயக்கம்: அர்ஜுன் - மீனா இருவருக்குமான உணர்வுப்பூர்வமான போராட்டத்தை இயக்குநர் வசந்த் மிகவும் அழகாகக் கையாண்டிருந்தார். ஆக்ஷன் கிங்காக வலம் வந்த அர்ஜுனை, அமைதியான பத்திரிகையாளராகக் காட்டியது பெரிய ஆச்சரியம்.

பஞ்சபூத பாடல்கள்: ரிதம் படத்தின் மிகப்பெரிய பலம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என இயற்கையின் ஐந்து பூதங்களை மையமாக வைத்து ஐந்து பாடல்களை உருவாக்கியிருந்தார். "நதியே நதியே", "காற்றே என் வாசல்", என ஒவ்வொன்றும் மாஸ்டர் பீஸ். இப்போது கேட்டாலும் ப்ரஷ்ஷாக இருக்கும் பாடல்களை தந்திருந்தார் ஏஆர் ரஹ்மான். பாடல் சக்சஸ் பெற்ற அளவுக்கு அப்போது படம் பெரிய பாக்ஸ் ஆபீஸ் சக்சஸ் இல்லை என்றாலும், காலம் கடந்து கொண்டாடப்படும் கல்ட் கிளாசிக்காக மாறியது ரிதம்.
தெனாலி மற்றும் பிரியமானவளே, கமர்ஷியல் சாம்ராஜ்யம்
2000-ம் ஆண்டில் வெறும் சீரியஸான காதல் படங்கள் மட்டுமல்லாமல், பக்கா கமர்ஷியல் பொழுதுபோக்குப் படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன.
தெனாலி: எல்லாவற்றிற்கும் பயப்படும் ஒரு இளைஞனாக கமல்ஹாசன் நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படம் 'தெனாலி'. இலங்கைப் பின்னணியில் இருந்து வரும் ஒரு அகதியின் வலியை நகைச்சுவையோடு சொல்லிய படம். கமலின் இலங்கைத் தமிழ் உச்சரிப்பும், ஜெயராமுடனான காமெடி காட்சிகளும் தியேட்டரை சிரிப்பலையில் ஆழ்த்தின. ஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளலான பாடல்கள் படத்திற்குப் பெரும் பலம்.
பிரியமானவளே: விஜய் தனது வழக்கமான பார்முலாவிலிருந்து சற்று விலகி, திருமண ஒப்பந்தம் (Contract Marriage) என்ற மையக்கருவை வைத்து நடித்த குடும்பத் திரைப்படம். விஜய்க்கும் சிம்ரனுக்குமான கெமிஸ்ட்ரி இந்தப் படத்தில் உச்சம் தொட்டது. "எனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி தென்றல் மாதிரி", "ஜூன் ஜூலை மாதத்தில்" என எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட். ஸ்பீக்கரில் பேஸ் சோதித்து பார்க்க, மிசிசிப்பி நதி குலுங்க குலுங்க பாடல் பயன்பட்டது, அந்த அளவுக்கு, மொத்த குத்து வித்தையையும் பாடலில் இறக்கியிருப்பார், எஸ்.ஏ.ராஜ்குமார்.

கேப்டனின் மாஸ்
2000-ம் ஆண்டு விஜயகாந்திற்கு ஒரு பொற்காலம். ஒரே ஆண்டில் இரண்டு மெகா பிளாக்பஸ்டர்களை அவர் கொடுத்தார்.
வானத்தைப் போல: விக்ரமன் இயக்கத்தில் வெளியான அண்ணன் - தம்பி பாசக்கதை. குடும்பம் குடும்பமாக திரையரங்கில் மக்கள் குவிந்தனர். விஜயகாந்த் இரட்டை வேடங்களில் அசத்தியிருப்பார். போதாத குறைக்கு, பிரபு தேவா, மீனா, செந்தில் என ஸ்டார்கள் நிரம்பியிருந்தனர். சென்டிமென்ட் காட்சிகளும், எஸ்.ஏ.ராஜ்குமாரின் "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை" போன்ற பாடல்களும் பாக்ஸ் ஆபிஸை நிரப்பின. மெகா ஹிட் படமாக மாறியது வானத்தை போல.
வல்லரசு: வானத்தைப் போல சென்டிமென்ட் என்றால், வல்லரசு பக்கா ஆக்ஷன் படம். நேர்மையான காவல்துறை அதிகாரியாக தேசத்துரோகிகளை விஜயகாந்த் வேட்டையாடிய விதம் ரசிகர்களை விசிலடிக்க வைத்தது.

பார்த்தேன் ரசித்தேன் & சிநேகிதியே
பார்த்தேன் ரசித்தேன்: பிரசாந்த், லைலா நடித்த இப்படத்தில் சிம்ரன் முதல்முறையாக வில்லியாக நடித்து மிரட்டியிருந்தார். தோழனாக இருக்கும் ஒருவனை காதலித்து, அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்லும் பானு என்ற கதாபாத்திரத்தில் சிம்ரனின் நடிப்பு அபாரம். பரத்வாஜ் இசையில் பாடல்களும் ஹிட். பேருக்குதான் லைலா ஹீரோயின், பாவம் பேசுவதற்கு ஒரு சான்ஸ் கூட கிடைக்கவில்லை. ஆனால் மொத்த ஸ்க்ரீனையும் பிரசாந்த்தும், சிம்ரனுமே தீப்பிடிக்க வைத்தனர். ராகவா லாரன்ஸ் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்திருப்பார்.
சிநேகிதியே: பிரியதர்ஷன் இயக்கத்தில் ஜோதிகா, ஷர்பானி முகர்ஜி, தபு நடித்த ஒரு அருமையான த்ரில்லர் படம். இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமே, படத்தில் ஒரு ஆண் கதாபாத்திரம் கூட பிரதானமாக இருக்காது (கடைசி சில நிமிடங்களைத் தவிர). வித்யாசாகரின் இசையில் "ராதை மனதில், ராதை மனதில் என்ன ரகசியமோ" பாடல் இப்போது கூட கல்லூரி ஆண்டு விழாக்களில் ஒலிக்கிறது.

ரீவைண்ட்
2000-ம் ஆண்டு வெளியாகி முத்திரை பதித்த பல படங்களை (உதாரணமாக பட்ஜெட் பத்மநாபன், பாரதி, சீனு, மாயி) இந்த ஒற்றைக் கட்டுரையில் அடக்கிவிட முடியாது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுத்தன.

இன்று பான்-இந்தியா (Pan-India), பிரம்மாண்ட சிஜி (CG), ஆயிரம் கோடி வசூல் என தமிழ் சினிமா எங்கேயோ சென்றுவிட்டது. ஆனால், ஒரு நல்ல கதையையும், மனதை வருடும் இசையையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட 2000-ம் ஆண்டின் படங்கள், இன்றும் நம் நினைவுகளில் பசுமையாக இருக்கின்றன. இந்தப் படங்களின் பாடல்கள் இன்றும் நம் ப்ளேலிஸ்ட்களில் (Playlists) ஒலிக்கின்றன என்றால், அதுதான் அந்த காலகட்டத்தின் படைப்பாளிகள் செய்த நிஜமான மேஜிக்!
நீங்கள் 90s கிட் ஆக இருந்தால், இந்தப் படங்களோடு உங்களுக்கு இருக்கும் மறக்க முடியாத தியேட்டர் அனுபவங்களை எண்ணிப் பார்த்து ஒரு நொடி புன்னகைக்காமல் இருக்க முடியாது!













Click it and Unblock the Notifications