"இந்தா இருக்கு பட்டியல்.. நீங்க எப்போ DTCP அனுமதிக்கு விண்ணப்பிச்சீங்க?" ஸ்ரீதர் வேம்புவுக்கு கேள்வி
சென்னை: "தமிழ்நாடு அரசின் Single Window Portal மூலமாக DTCP Approval பெற விண்ணப்பித்தவர்களுக்கு உடனுக்குடன் அனுமதி கொடுத்துள்ளனர். அதற்கான பட்டியல் ஆன்லைனில் உள்ளது. உங்கள் பள்ளியின் கட்டிடத்திற்கு DTCP அனுமதி எப்போது விண்ணப்பித்தீர்கள்?" என திமுக ஆட்சியில் பள்ளி கட்டிட அனுமதி தராமல் இழுத்தடித்ததாக குற்றம்சாட்டிய ஸ்ரீதர் வேம்புவுக்கு சமூக வலைத்தளத்தில் நெட்டிசன் ஒருவர், கேள்வி எழுப்பியுள்ளார்.
Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், "கிராமப்புற குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிப்பதற்காக நாங்கள் கலைவாணி கல்வி மையம் என்ற பள்ளியை தொடங்கினோம். அப்பள்ளிக்கு கடந்த ஆட்சியில் ஒப்புதல் பெறுவதற்கு கால தாமதத்தை சந்திக்க வேண்டி இருந்தது. மேலும், குறிப்பட்ட அளவு பணமும் கேட்கப்பட்டது. இலவச பள்ளியாக இருந்தாலும் இது ஒன்று மட்டுமே வழி என கூறப்பட்டது. தற்போது முதல்வராக விஜய் வந்த பிறகு, ஒப்புதல் உடனடியாக கிடைத்துவிட்டது" எனத் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டை திமுகவினர் திட்டவட்டமாக மறுத்தனர். ஸ்ரீதர் வேம்பு சொல்வது போல் திமுக ஆட்சியில் அப்ரூவல் பெற காத்திருந்தார் என்பது உண்மைக்கு மாறான தகவலாக உள்ளது. இவரின் Kalaivani Kalvi Maiyam என்பது மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் National Institute of Open Schooling வகையை சார்ந்தது. இதன் ஒப்புதல் அனைத்தும் மத்திய அரசை சார்ந்து இருக்கும் போது எதற்காக திமுக அரசின் முடிவுக்கு காத்திருந்தார்? எனக் கேள்வி எழுப்பி இருந்தனர்.
மேலும், கலைவாணி கல்வி மையம் 2024 ஆம் ஆண்டிலேயே முழுமையாகச் செயல்பட்டு வருவதாக ஸ்ரீதர் வேம்புவே ஏற்கனவே சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். பள்ளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்ட பிறகு, இப்போதுதான் புதிய அரசு அனுமதி கொடுத்தது என்று கூறுவது எப்படி உண்மையாக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தன் மீதான விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கப் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "தவெக அரசுக்கு உதவுவதற்காக நான் பொய் சொல்வதாக திமுகவினர் என் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். உண்மை என்னவென்றால், நாங்கள் தென்காசி மற்றும் தேனி ஆகிய இரு இடங்களிலும் கிராமப்புறக் குழந்தைகளுக்கு இலவச 'கலைவாணி கல்வி மைய' பள்ளிகளை நடத்தி வருகிறோம்.
தேனியில் நேர்மையான ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவரால் தொடங்கப்பட்ட பள்ளியை, முந்தைய திமுக அரசு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கக் கோடிக்கணக்கில் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததால் அவர் மூடினார். அதன் பின்னரே அந்த அறக்கட்டளையை நாங்கள் ஏற்று நடத்தினோம். மாநில அரசின் முறையான அங்கீகாரம் இல்லாததால் தேனி பள்ளி தொடர்ந்து முந்தைய அரசால் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளானது; அங்கீகாரம் பெற மீண்டும் லஞ்சம் கேட்கப்பட்டதால் அந்த விவகாரம் இழுபறியிலேயே இருந்தது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ஸ்ரீதர் வேம்புவுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைத்தளத்தில், கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீதர் வேம்புவை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "படித்தவர் நீங்கள்.. நிச்சயம் தமிழ்நாடு அரசின் Single Window Portal மூலமாக தான் DTCP Approval வாங்க Apply செய்து இருப்பீர்கள். இது இந்த 2026ஆம் ஆண்டு தென்காசியில் கொடுக்கப்பட்ட அனுமதி பட்டியல். அனைத்தும் உடனுக்குடன் கொடுத்து இருக்கிறார்கள். உங்கள் பள்ளியின் கட்டிடத்திற்கு DTCP Approval எப்போது Apply செய்தீர்கள்? எப்போது கிடைத்தது? என்ற தகவல் கொடுக்கலாமே.." எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தென்காசியில் பள்ளிகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பங்களையும் ஆதாரத்திற்காக தனது பதிவில் அவர் இணைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications