பாஸ்போர்ட் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது மத்திய அரசு.. ஜூலை 1 முதல் அமல்! புதிய கட்டணம் என்ன?
டெல்லி: வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஸ்போர்ட் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.
வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பிப்பு பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தத்கால் முறையில் பெற விரும்பினால் ரூ.5,000 செலுத்த வேண்டும்.

அதேபோல், 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டின் கட்டணம் ரூ.2,000-ல் இருந்து ரூ.3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தத்கால் கட்டணம் ரூ.6,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான 36 பக்க பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தத்கால் முறையில் பெற ரூ.4,250 கட்டணம் செலுத்த வேண்டும்.
பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்தால் புதிய 36 பக்க பாஸ்போர்ட் பெற ரூ.5,000 கட்டணமும், தத்கால் முறையில் ரூ.7,500 கட்டணமும் செலுத்த வேண்டும். 60 பக்க பாஸ்போர்ட்டுக்கு இதைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், Police Clearance Certificate (PCC), Surrender Certificate, Global Entry Program Verification உள்ளிட்ட சான்றிதழ்களுக்கான கட்டணமும் ரூ.750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும், 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீத கட்டண சலுகை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடு செல்ல அல்லது பாஸ்போர்ட் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளவர்கள், ஜூலை 1-க்கு முன்பாக விண்ணப்பித்தால் தற்போதைய கட்டணத்தில் பயன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications