அதிமுக பிளவை சரி செய்ய எடப்பாடி தீவிர முயற்சி.. எஸ்பி வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி
சென்னை: அதிமுகவில் முக்கிய நிர்வாக மாற்றங்களை அறிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை துணைப் பொதுச்செயலாளராக நியமித்துள்ளார். எம் ஆர் விஜயபாஸ்கர், மணிகண்டன், அருண்மொழித் தேவன் ஆகியோர் கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சட்டமன்ற தேர்தல் தோல்வியால் அதிமுகவில் உள்கட்சி பூசல் அதிகரித்தது. சட்டசபையில் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏக்கள் தனி அணியாக செயல்பட்ட நிலையில், தகுதி நீக்க நடவடிக்கையை தவிர்க்க மீண்டும் எடப்பாடியுடன் இணக்கமாக சென்றனர்.

எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு
தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் பதவியை பறித்த எடப்பாடி புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்தார். அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி அணிக்கே மீண்டும் திரும்பிய எம்.எல்.ஏக்களுக்கு பழைய பதவியை கொடுக்க முடியாது என கைவிரித்தார். எஸ்பி வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் என முக்கிய தலைகளுக்கு கூட எடப்பாடி பழனிசாமி பழைய பொறுப்பை வழங்காமல் இருந்தார். இது அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த போதும், வேலுமணி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்யாமல் அவையிலேயே இருந்தனர். அதேபோல, முதல்வர் விஜய்யின் பதிலுரை முடிந்தததும் அவரை சந்தித்து பாராட்டு தெரிவித்தார். எஸ்பி வேலுமணியின் இந்த செயல்பாடுகள் மீண்டும் தவெக ஆதரவு நிலைப்பாட்டை நோக்கி செல்கிறாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்த நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எஸ்பி வேலுமணிக்கு பொறுப்பு
எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார். இதன் விவரம் வருமாறு:-
* எஸ்பி வேலுமணி: அதிமுக துணை பொதுச்செயலாளாக நியமனம்
* எம் ஆர் விஜயபாஸ்கர், மணிகண்டன், அருண்மொழித் தேவன் - கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களாக நியமனம்
* கே பி அன்பழகன், காமராஜ், கேசி வீரமணி, திருத்தணி கோ அரி அமைப்பு செயலர்களாக நியமனம்.
அதிருப்தியை முடிவுக்கு கொண்டு வர
அதிமுகவில் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால், வேலுமணி உள்ளிட்டோரின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்த நிலையில், மீண்டும் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார். கட்சியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக எடப்பாடி பழனிசாமி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications