விஜய்க்கு தான் விஷப்பரிட்சை! பந்தயத்துக்கு ரெடி? பரபரவென வேலையை ஆரம்பித்த EC! விரைவில் இடைத்தேர்தல்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் மீண்டும் தேர்தல் களத்துக்கு தயாராகும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக தவெக தலைவரின் வெற்றியை பரிசோதிக்கும் தேர்தலாக இந்த இடைத் தேர்தல் இருக்கும் என்பதால் இது ஒரு எடைத் தேர்தலாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் வென்ற அவர், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு அதிமுகவைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த எஸ். ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த பி. சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதியைச் சேர்ந்த இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இடைத்தேர்தல்
இதன் காரணமாக திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இதற்கிடையே விராலிமலை எம்.எல்.ஏ. விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்துள்ளதால் மொத்தம் 6 தொகுதிகள் தற்போதைக்கு காலியாக உள்ளனர். விதிப்படி ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியானால், பொதுவாக 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. அந்த அடிப்படையில், இந்த 6 தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.
தேர்தல் ஆணையம்
இந்த நிலையில், தேர்தல் நடத்துவதற்கான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியிலான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளின் செயல்திறனை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விராலிமலை
மீதமுள்ள விராலிமலை தொகுதிக்கான இயந்திரங்களின் பரிசோதனை பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதற்கிடையே, இந்த 6 தொகுதிகள் இடம்பெற்றுள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் தேர்தல் தொடர்பான முழுமையான அறிக்கைகளை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. தொகுதிகளின் தற்போதைய நிலை, வாக்காளர் பட்டியல், பாதுகாப்பு ஏற்பாடுகள், நிர்வாக வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் தேதி
மாவட்ட நிர்வாகங்களிடமிருந்து பெறப்படும் அறிக்கைகள், வாக்குப்பதிவு இயந்திரங்களின் தயார்நிலை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இறுதி செய்யும் என்று கூறப்படுகிறது. அரசியல் கட்சிகள் தரப்பில் ஏற்கனவே தொகுதி வாரியான கணக்கீடுகள் தொடங்கியுள்ளன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை தங்களது அரசியல் செல்வாக்கை நிரூபிக்கும் களமாகவே பார்க்கின்றன.
விஜய்
குறிப்பாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு உருவாகியுள்ள புதிய அரசியல் சூழலில் நடைபெறவுள்ள முதல் முக்கிய தேர்தல் என்பதால் இதன் மீது கூடுதல் கவனம் திரும்பியுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் கட்சிப் பணிகளை வலுப்படுத்துவது, உள்ளூர் நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது, சாத்தியமான வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற பணிகளையும் முக்கிய அரசியல் கட்சிகள் அமைதியாக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இடைத்தேர்தல் அறிவிப்பு
மேலும் அரசியல் வட்டாரங்களில் மற்றொரு முக்கிய தகவலும் பேசப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் மேலும், சில சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகக்கூடும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. அப்படி நடந்தால், தற்போது காலியாக உள்ள 6 தொகுதிகளுடன் மேலும் சில தொகுதிகளும் இடைத்தேர்தல் பட்டியலில் சேர வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தற்போதைய சூழலில் தேர்தல் பணிகள் வேகமெடுத்திருப்பதால், இடைத்தேர்தல் அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications