We the leaders: ஜூலை 1 ஆம் தேதி முதல்.. புதிய அறிவிப்பை வெளியிட்டார் அண்ணாமலை
சென்னை: ஜூலை 1 ஆம் தேதி முதல் களப்பணி தொடங்கவுள்ளது என வி தீ லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாற போகிறது என்பதையும் அவரது அமைப்பை சேர்ந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: கோவையில் அப்துல்கலாம் பெயரில் அறநெறி, அரசியல் மையம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்க வேண்டும்.

அரசு நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நம் தன்னார்வலர்கள் இறங்கியுள்ளனர். தினமும் தன்னார்வலர்கள் இணைந்து வருகிறார்கள்.
இந்தியா மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும். அதில் தமிழகம் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கில், அனைத்து இனத்தையும், மதத்தையும் ஜாதியையும் இணைத்து "நாம் இந்தியர்கள், நாம் தமிழர்கள்" என்கிற ஒற்றை கருத்துடன் முன்னெடுக்கிறோம்.
பிரிட்டனில் உள்ள தன்னார்வலர்கள், வீ தி லீடர்ஸ் அமைப்பில் இணைய விரும்புபவர்கள் www.wetheleader.org என்ற அமைப்பில் இணையலாம்.
ஜூலை 1 முதல் நம் களப்பணியை தொடங்கவுள்ளோம். அந்த மாதம் முழுவதும் போதை பொருளுக்கு எதிராகவும், ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் களம் இறங்கவுள்ளோம். அரசு மீது பழி போடாமல் களம் இறங்குகிறோம்.
ஜூலை முதல் வாரத்தில் மொபைல் செயலி வந்துவிடும் என அண்ணாமலை கூறியுள்ளார். "வி தி லீடர்ஸ்" என்ற அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளோம் என அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் அவர் கூறியிருப்பதாவது: போதை கலாச்சாரத்திற்கு எதிராக ஜூலை 19ஆம் தேதி திருச்செந்தூரில் பொதுக் கூட்டம் நடத்த போகிறோம். அதில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். எங்கள் அமைப்பு எந்த அரசியல் கட்சிக்கும் பினாமி அமைப்பு அல்ல.
தமிழர்களை முன்னிறுத்தி தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழக அரசு செயல்படுத்தி வரும் சில திட்டங்களை வரவேற்கிறோம்.
அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை அமைச்சர்களாக்கி இருப்பது பாராட்டுக்குரியது. அதே வேளையில் தவெகவுக்கும் திராவிட கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பது போல் எங்களுக்கு தெரியவில்லை.
தற்போது அமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். வி தி லீடர்ஸ் அமைப்பை விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
எதிர்காலத்தில் உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். எதிர்கால அரசியல் சூழலுக்கேற்ப கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக எங்கள் அமைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. அங்கு நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவுடன் தன்னை ஓரங்கட்டுவதாகவும் தனது அறிவுரைகளை காது கொடுத்து கேட்பதில்லை என்றும் குற்றம்சாட்டி அக்கட்சியில் இருந்து விலகினார்.












Click it and Unblock the Notifications