பரந்தூரில் ரியல் எஸ்டேட்டில் பெரிய அளவில் முதலீடு செய்த விஜபிக்கள்.. தூக்கத்தை தொலைக்க வைத்த விஜய்
சென்னை: விமான நிலையம் வரும் என்ற நம்பிக்கையில் பரந்தூர், காரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வெளிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்து பெருமளவில் நிலங்களை வாங்கியிருந்தனர். 'காரை' போன்ற கிராமங்களில் தனியார் நிறுவனங்கள் லே-அவுட்கள் போட்டு, சதுர அடி சில நூறு ரூபாய்க்கு விற்ற நிலங்கள், பின்னர் பன்மடங்கு விலைக்கு கைமாறின. ஆனால், இப்போது திட்டம் மாறுவதால், முதலீட்டாளர்கள் தங்களின் நிலங்களை வாங்கிய விலையை விடக் குறைந்த விலைக்கு விற்க முயன்றாலும் கூட, வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து 16 கிமீ தூரத்தில் உள்ள பரந்தூரில் அமையவிருந்த புதிய விமான நிலையத்திற்கு எதிராக காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கி ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் திட்டம் கைவிடப்படும் நிலையை எட்டியிருக்கிறது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, அந்த இடத்தில் விமான நிலையத்தை அமைப்பதில்லை என்றும், சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்திற்கு மாற்று இடங்களை ஆராய்வதாகவும் முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் பரந்தூரில் 27,400 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று அரசு உள்ரீதியாக முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான மாற்று மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பரந்தூரில் இல்லை
"சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை. ஆனால் அது பரந்தூரில் செயல்படுத்தப்படாது. இது குறித்து அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன. மாற்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்பது தான் தலைமை செயலக வட்டாரங்கள் கூறும் தகவலாக இருப்பதாக பல்வேறு ஆங்கில ஊடகங்கள் அடுத்தடுத்து தங்களது சோர்ஸ் மூலம் விசாரித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
காலவரையற்ற போராட்டம்
எனினும் இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் மிக நீண்ட நிலம் கையகப்படுத்தல் தொடர்பான சர்ச்சைகளில் ஒன்று முடிவுக்கு வந்துவிடும். சரியிக டிசம்பர் 16, 2019 அன்று ஏகனாபுரம் கிராம மக்கள் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக காலவரையற்ற போராட்டம் தொடங்கியது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கிராமம் முழுவதையுமே கையகப்படுத்த வேண்டிய சூழல் இருந்ததால் பரந்தூருக்கு அருகில் அமைந்துள்ள ஏகனாபுரம், இப்போராட்டத்தின் மையப்புள்ளியாக இருந்தது. ஏகனாபுரத்தில் 1,005 வீடுகளில், 605 வீடுகள் கையகப்படுத்த வேண்டிய நிலை இருந்தது. ஒட்டுமொத்தமாக கிராமத்தில் சுமார் 920 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படஇருந்தது. இதனால் அந்த ஊரே இல்லாமல் போய்விடும் நிலை இருந்தது.
1,822.45 கோடி ஒதுக்கியது அரசு
இத்திட்டத்திற்காக 13 கிராமங்களில் 5,746 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த வேண்டியிருந்தது. இதில் குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளும் இருந்தது. கடந்த 2021ம் ஆண்டுஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அசு 'தொழில்துறை நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்' கீழ் மாநில அரசு கையகப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியதுடன், இழப்பீட்டுத் தொகையாக 1,822.45 கோடி ரூபாயையும் ஒதுக்கியது.
விஜய் தந்த ஆதரவு
இத்திட்டத்தைச் செயல்படுத்த, சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரிகள், சிறப்பு வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகளைக் கொண்ட ஒரு அர்ப்பணிப்புள்ள நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டது. மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது; அதேவேளையில், பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்கள் துறை, விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம், நிதி ஆயோக், சுற்றுச்சூழல்-வன-காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகள் இதற்கான ஆரம்பக்கட்ட அனுமதிகளை வழங்கின. இத்திட்டம் நிர்வாக ரீதியாக வேகம் பெற்றது. ஆனால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கடும் போராட்டத்தை நடத்தினார்கள். இத்திட்டம் வ விவசாய நிலங்களை அழித்து, நீர் ஆதாரங்களைப் பாதித்து, நீண்ட காலமாக அங்கு வசித்து வரும் தங்களை இடம்பெயரச் செய்யும் என்று வாதிட்டனர். அவர்களை கடந்த ஜனவரி 20, 2025 அன்று நேரில் சந்தித்த தவெக தலைவரும் இன்றைய முதல்வருமான விஜய், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்தார். இப்போது அவரே முதல்வராக வந்துள்ளால், கிட்டத்தட்ட பரந்தூர் விமான நிலையத்திட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இயல்பு நிலை திரும்பியது
இதனால் இப்போது போராட்டக் களங்கள் முற்றிலும் அமைதியாகிவிட்டன. மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன. கடந்த மே மாதத்தில் இருந்து புதிய நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான ஆவணப் பணிகள் மட்டுமே தற்போது நடந்து வருகின்றன.
1700 ஏக்கர் நிலத்தில் அரசுக்கு உள்ள சவால்
கடந்த இரண்டரை ஆண்டுகளில் இத்திட்டத்திற்காகச் சுமார் 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டம் கைவிடப்படும் பட்சத்தில், இந்த நிலங்களை என்ன செய்வது என்ற சவால் தமிழக அரசுக்கு எழுந்துள்ளது. விவசாயத்தைப் பாதுகாக்கும் வகையிலான வேளாண் செயலாக்க மையங்கள், விவசாய சந்தை உள்கட்டமைப்புகள், பட்டுப் பூங்கா அல்லது சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஆனால், அங்கு அபாயகரமான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என்கிறார்கள்.
ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் அவதி
விமான நிலையம் வரும் என்ற நம்பிக்கையில் பரந்தூர், காரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வெளிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்து பெருமளவில் நிலங்களை வாங்கி போட்டிருந்தார்கள். 'காரை' போன்ற கிராமங்களில் பெரிய ரியல் எஸ்டேட் தனியார் நிறுவனங்கள் லே-அவுட்கள் போட்டு, சதுர அடி சில நூறு ரூபாய்க்கு விற்ற நிலங்கள், பின்னர் பன்மடங்கு விலைக்கு கைமாறின.
ஆனால், இப்போது திட்டம் மாறுவதால், முதலீட்டாளர்கள் தங்களின் நிலங்களை வாங்கிய விலையை விடக் குறைந்த விலைக்கு விற்க முயன்றாலும் கூட, வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.














Click it and Unblock the Notifications