மலையாளிகளை மிரள வைத்த முல்லைப் பெரியாறு போராட்டம்!
நெருப்பை எந்தப் பக்கம் தொட்டாலும் சுடும் என்பது போல முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை வைத்து தமிழகத்தை மிரட்டிப் பணிய வைக்க முயன்ற கேரளத்தினருக்கு அந்தப் பிரச்சினை அவர்களையே பதம் பார்க்க வைத்த ஆண்டு இது.
நூறாண்டுகளுக்கு முன்பு பென்னி குயிக் என்ற ஆங்கிலேய என்ஜீனியரின் கடும் உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் கட்டப்பட்டு, இன்றும் புதுப் பெண் போல கம்பீரமாக, கட்டுக்குலையாமல் காட்சியளிக்கும் முல்லைப் பெரியாறு அணை, மதுரை,தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட பாசனத்திற்கும் உயிர் நாடியாகும்.
ஒரு காலத்தில் தென் தமிழகத்தில் நிலவி வந்த பஞ்சம்,வறட்சியைப் போக்கும் வகையிலேயே இந்த அணையைக் கட்டியது அப்போதைய ஆங்கிலேய அரசு. தமிழகத்திற்கு 999 ஆண்டு கால குத்தகைக்கும் இந்த அணை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் தரப்பட்டன.
ஆனால் தனது சுயநலத்தால் இந்த அணை பலவீனமாகி விட்டது, இடிக்க வேண்டும், புது அணை கட்ட வேண்டும் என்று கிளம்பியது கேரள அரசு. அதன் தூண்டுதலின் பேரில் கேரளாவில் பல கட்சிகள் கிளம்பின. தமிழர்கள் மீதும், தமிழர்களின் வர்த்தக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். மேலும், தமிழகத்திலிருந்து போன ஐயப்ப பக்தர்கள் மீதும் வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதைப் பார்த்து வெகுண்ட தமிழர்கள் தமிழகத்தில் வரலாறு காணாத போராட்டத்தில் குதித்தனர். தமிழகம் முழுவதும் மலையாளிகள் நடத்தி வரும் டீக்கடைகள், பேக்கரிகள், நகைக் கடைகள் என அனைத்து வர்த்தக நிறுவனங்களும் கடும் தாக்குதலுக்குள்ளாகின. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவே அதிர்ச்சியுடன் கூறும் அளவுக்கு தமிழகத்தி்ல மலையாளிகளுக்கு எதிராக பெரும் போராட்ட அலை வியாபித்தது.
2011ம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய இந்த பெரும் போராட்டம் இன்னும் தணியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் இப்படி தங்களைத் தாக்குவார்கள் என்பதை கற்பனையிலும் கூட நினைத்துப் பார்த்திராத தமிழகத்தில் வாழும் மலையாளிகள், கேரள அரசைக் கண்டித்து குரல் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
சாதாரண அணைப் பிரச்சினையை கேரள அரசியல்வாதிகளும், அங்குள்ள சில சமூக விரோதிகளும் சேர்ந்து இனப் பிரச்சினையாக மாற்றிய ஆண்டு இது. காலம் காலமாக நீண்டு நெடிய உறவையும்,தொப்புள் கொடி உறவையும் கொண்டுள்ள தமிழர்கள் மலையாளிகள் இடையிலான உறவை பாலம் பாலமாக வெடித்துப் போகச் செய்யும் வகையில் இந்த முல்லைப் பெரியாறு அணை விவகாரம் அமைந்து விட்டது பலரையும வருத்தப்பட வைத்து விட்டது என்பதில் சந்தேகம் இல்லை.