14 அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி மாற்றம்- அனைவரும் முக்குலத்தோர் வகுப்பினர்!
சென்னை: தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 14 அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் அனைவரும் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
சமீபத்தில் அதிமுகவை விட்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கூண்டோடு நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா. மேலும் சசிகலா ஆதரவாளர்களையும் அவர் களையெடுத்து வருகிறார். பல சசிகலா ஆதரவு அமைச்சர்கள் ஜெயலலிதாவின் ஹிட் லிஸ்ட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 14 அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகளை திடீரென ஜெயலலிதா இடமாற்றம் செய்துள்ளார். இவர்கள் அனைவரும் சசிகலாவின் சிபாரிசின்பேரில் நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. அமைச்சர்களின் நடமாட்டம், செயல்பாடுகள் குறித்து சசிகலாவுக்கு இவர்கள் உளவு சொல்லி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு விட்டனர். அனைவரும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் பரபரப்பாகியுள்ளது.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகிய முக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகளும் நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications