ஆமை வேகத்தில் நடக்கும் நிவாரணப் பணிகள்: வேல்முருகன் நாளை உண்ணாவிரதம்
பண்ருட்டி: தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையில் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து நாளை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முன்னாள் பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தானே புயலால் கடும் பாதிப்பக்குள்ளாகியுள்ள கடலூர் மாவட்டத்தில் உணவு, பால், தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் பிரதிநிதிகளும், முதல்வர் ஜெயலலிதாவும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறாதது வேதனையாக உள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகங்கள் மெத்தனமாக உள்ளது. கடந்த 30ம் தேதியில் இருந்து நடந்தும், பைக்கில் சென்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகின்றேன். நான் பார்த்த வரைக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவிகள் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை. மின்சாரம் எப்பொழுது வரும் என்று அதிகாரிகளுக்கே தெரியவில்லை.
எனவே, பிற மாவட்டங்களில் உள்ள மின்சாரம், விவசாயம், தோட்டக்கலை, வருவாய், உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளைக் கொண்டு கடலூர் மாவட்டத்தில் புனரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக அரிசி, பால், குடிநீர் போன்ற அத்தியாவியப் பொருட்களை என்.எல்.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையின் குடிநீர் தேவையைப் போக்க வீராணம் ஏரியில் இருந்து 10,000 லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்ற அரசு தற்போது கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு போதிய குடிநீர் வழங்காதது வேதனையாக உள்ளது. ஆகையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நிவாரணப் பணிகள் வெகு தாமதாக நடந்து வருகின்றது. எனவே, இதைக் கண்டித்தும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications