ஹெல்மட் போடாதவர்களை மாலை போட்டு வரவேற்று நூதனப் பிரசாரம் செய்த ஜார்க்கண்ட் போலீஸ்!
ராஞ்சி: ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடித்து கண்டிப்பது ஒருவகை. அபராதம் போடுவது மற்றொரு வகை தண்டனை. இதை இரண்டையும் செய்யாமல் பணம் வாங்கிக் கொண்டு நைசாக அனுப்பி விடுவதும் கூட ஒரு வகை. ஆனால் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்தி அவர்களுக்கு பூமாலை அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் வியப்படைய வைத்துள்ளனர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகர போலீசார்.
ஜனவரி 1 முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களை நிறுத்தி அவர்களுக்கு பூமாலை அணிவித்து ஹெல்மெட் அணியுமாறு ராஞ்சி நகர சாலை பாதுகாப்பு போலீசார் கூறி வருகின்றனர்.
வித்தியாசமான இந்த செயல்பாடுகள் குறித்து ராஞ்சி போலீசார் கூறியதாவது:
இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என எவ்வளவோ அறிவுரைகள் மற்றும் விளம்பரங்கள் வெளியிட்ட பிறகும் பலர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.
ஹெல்மெட் அணிவதைவிட அபராதம் கட்டுவதை பழக்கமாக கொண்டுள்ளனர். அபராதம் கட்டுவது இப்போது வாடிக்கையாகி விட்ட நிலையில் இவர்களின் இந்த செயலை தடுக்க புதுமையான நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளோம்.
ஹெல்மெட் அணிவது அதிகரிக்கும்
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்தி கேமரா முன் பூமாலை அணிவித்து ஹெல்மெட் அணியுமாறு கூறுகிறோம். இதை கேமராவில் பதிவு செய்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பி செய்தித்தாள்களிலும் பிரசுரிக்கப்படும். இந்த செயலுக்காக வெட்கப்பட்டு ஹெல்மெட் அணிய ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இதே போல் வாகனங்கள் ஓட்டும் போது தொலைபேசியில் பேசுவதும் இதன் மூலம் குறையும் என தெரிவித்தனர்.
இதை வேறு விதமாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஹெல்மெட் அணியாவிட்டால் மாலை போட்டு மேலே போகவேண்டியதுதான் என்று சொல்லாமல் சொல்கின்றனரோ என்னவோ?












Click it and Unblock the Notifications