நிவாரணப் பணிகளுக்கு மேலும் ரூ.700 கோடி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
சென்னை: தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா மேலும் ரூ.700 கோடி வழங்கியுள்ளார்.
புயலால் பாதித்த அன்றே பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா ரூ.150 கோடி நிதி விடுவித்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஜெயலலிதா நேற்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 35 பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில் 6,000 பேர் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டன. குடும்பம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன. இது தவிர, மின்சாரப் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மெழுகுவர்த்திகள் வழங்கப்பட்டுள்ளன.
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஏறத்தாழ 3.5 லட்சம் குடிசை மற்றும் ஓடு வேய்ந்த வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. பகுதியாக சேதமடைந்த குடிசைகளுக்கு நிவாரண உதவியாக தலா ரூ.2,500ம், முழுமையாக சேதமடைந்த குடிசை மற்றும் ஓட்டு வீடுகளுக்கு தலா ரூ.5,000ம் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கென அரசு ரூ.114 கோடி செலவிடும். இந்த நிவாரண உதவிகளை ஜனவரி 5ம் தேதிக்குள் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
கடலூர் மாவட்டத்திலுள்ள 5 நகராட்சிகளில் உள்ள 174 வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் 122 வார்டுகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 57 லாரிகள் மூலம் மீதமுள்ள 52 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சிகளில் 74 சதவீதம் அளவுக்கு இப்போது குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் குடிநீர் விநியோகம் முற்றிலும் சீரமைக்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் குடிநீர் வழங்குவதை, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தலைமையில் 8 அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். குடிநீர் விநியோகத்துக்கு ரூ. 50 கோடி நிதி வழங்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் 27 உயர் அழுத்த மின் கோபுரங்கள், 4,500 மின்மாற்றிகள், 36,000 மின் கம்பங்கள், 350 கி.மீ. நீள மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. வரும் 5ம் தேதிக்குள் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின் விநியோகம் சீர்செய்யப்பட்டு விடும். இந்த மின் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.300 கோடி நிதி உதவி உடனடியாக வழங்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் 58,000 ஹெக்டேர் நெற்பயிர்களும், 23,500 ஹெக்டேர் பரப்பில் முந்திரி பயிர்களும் சேதமடைந்துள்ளன. 5,572 ஹெக்டேர் பரப்பில் கரும்பு பயிர்களும், 8, 947 ஹெக்டேர் பரப்பில் வாழை மற்றும் பயறு வகைகளும் சேதமடைந்துள்ளன. நெற் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.10,000ம், மற்ற நீர்ப்பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500ம் நிவாரணம் வழங்கப்படும். பலா, முந்திரி போன்ற தோட்டப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.9,000 வழங்கப்படும்.
பயிர்ச் சேதங்களுக்காக மொத்தம் ரூ.166 கோடி அளவுக்கு நிவாரணம் அளிக்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் கட்டுமரங்கள், வல்லம், எப்.ஆர்.பி படகுகள், விசைப்படகுகள் போன்ற சுமார் 4,600 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு ரூ.32,000ம், பகுதியாக சேதமடைந்தவற்றிற்கு ரூ.10,000ம், முழுவதும் சேதமடைந்த எப்.ஆர்.பி. படகுகள் மற்றும் வலைகளுக்கு ரூ.75,000ம், பகுதியாக சேதமடைந்த படகுகளுக்கு ரூ.20 ,000ம், முழுவதும் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு ரூ. 5 லட்சமும், பகுதியாக சேதமடைந்தவற்றிற்கு ரூ.3 லட்சமும், வலைகள் உள்ளிட்ட பொருள்கள் மட்டுமே சேதமடைந்த இனங்களுக்கு ரூ.10,000ம் வழங்கப்படும். இதற்கென மொத்தம் ரூ.20 கோடி நிதி வழங்கப்படும்.
கடலூரில் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் விழுந்ததால் 1,458 இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகளில் ஏற்பட்ட சேதங்களைத் தாற்காலிகமாக சீர்செய்ய ரூ.150 கோடி தேவைப்படுகிறது. அது உடனடியாக வழங்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications