பாஜகவின் துணை அமைப்பு தான் மம்தாவின் கட்சி: காங். குற்றச்சாட்டு
கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், பாஜகவின் துணை அமைப்பு என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கொல்கத்தாவில் இந்திரா காந்தியின் பெயரில் உள்ள அரசு கட்டடத்துக்கு கவிஞர் நஸ்ருல் இஸ்லாம் பெயரை சூட்ட அம் மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.
மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அரசில் பங்கேற்றுள்ள மம்தா பானர்ஜி முதல்வர் ஜெயலலிதா மாதிரி. எந்த நேரத்தில் எதைச் செய்வார் என்று சொல்லவே முடியாது.
மத்திய கூட்டணியில் இருந்தாலும் மம்தா கூட்டணியின் முடிவுகளை ஏற்க மாட்டார், நினைத்ததைச் செய்வார். சமீபத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, லோக்பால் மசோதா விவகாரங்களில் மத்திய அரசின் காலை வாரிவிட்டார்.
இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ள நிலையில், மோதலை மேலும் தீவிரமாக்கும் முயற்சிகளில் மம்தா ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள இந்திரா பவன் என்ற அரசு கட்டிடத்துக்கு பிரபல வங்காள கவிஞர் நஸ்ருல் இஸ்லாம் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.
அத்துடன் நிற்காமல், காங்கிரசில் உள்ள சிலர், தன்னை தினந்தோறும் திட்டி வருவதாகவும், மார்க்சிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து காங்கிரசார் தனது கட்சியினரை தாக்கி வருவதாகவும் மம்தா குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, காங்கிரசும் மம்தா பானர்ஜி மீது பதில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் பாஜக கட்சியின் துணை அமைப்பு தான் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி தீபா தாஸ்முன்ஷி கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவின் 'பி டீம்' தான். பாஜகவைப் போலவே மத்திய அரசின் திட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்றார்.
மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா பேசுகையில், நாங்கள் யாரையும் திட்டுவது இல்லை. ஆனால் அதை எங்கள் பலவீனமாக திரிணாமுல் காங்கிரஸ் கருதக்கூடாது என்றார்.
திரிணாமுல் பதிலடி:
இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மதன் மித்ரா என்ற அமைச்சர் கூறுகையில், காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு தைரியம் இருந்தால், அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா?' என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஷித் ஆல்வி கூறுகையில், இந்திரா காந்தியின் பெயரை மாற்ற மேற்கு வங்காள அரசு முயல்வது சரியல்ல. இந்திரா காந்தி, பிரதமராக இருந்ததுடன், உலகம் முழுவதும் மதிக்கப்பட்டவர். எனவே, அவர் பெயரை மாற்றுவதால், பொதுமக்கள் புண்பட்டுள்ளனர் என்றார்.
மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், காங்கிரசாருக்கு இந்திரா காந்தி யார், காங்கிரசாரால் அவர் எவ்வாறு பார்க்கப்படுகிறார், மதிக்கப்படுகிறார் என்பது மம்தா பானர்ஜிக்குத் தெரியும். இதற்கு மேல் இதில் நான் எதையும் பேச விரும்பவில்லை என்றார்.
இந் நிலையில் கொல்கத்தாவில் காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் இடையே இன்று அடிதடியும் நடந்தது.